பாடலை மறுவுருவாக்கம் (ரீமேக்) செய்யும்போது இசையமைத்தவர்களுக்கும் சன்மானம் வழங்க வேண்டும்

பழைய பாடல்களை ரீமேக் செய்யும் போது, அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்களிடம் அனுமதி பெற்று, உரிய சன்மானம் வழங்க வேண்டும் என இசையமைப்பாளர் தேவா கூறினார்.

இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். 420 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பழம்பெரும் நடிகர், நடிகைகள் நடித்த படங்களுக்கும் இசையமைத்துள்ளேன். இசை கலைஞர்களுக்கு வயது, ஓய்வு கிடையாது. தற்போது இசையமைப்பாளர்கள் பழையப் பாடல்களை ரீமேக் செய்கின்றனர். அப்படி ரீமேக் செய்யும் போது, அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்களிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர், அவர்களுக்கு உரிய சன்மானம் வழங்க வேண்டும். தற்போது, புதிய படத்தின் பாடல்களில் வார்த்தைகள் மறைந்து வருகின்றன. இந்தக் காலத்தில் உள்ள இளைஞர்கள் இதை மிகவும் விரும்புகின்றனர் என்றார்.

இசை நிகழ்ச்சி: சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் சார்பில் தேவாவின் தேனிசை நிகழ்ச்சி, ஐந்து சாலையில் உள்ள குஜராத்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

 -http://www.dinamani.com