கோலாலம்பூர் கார்கோசாவில் மலாயாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்று கண்காட்சி

-எம். சாமிநாதன், செப்டெம்பர் 7, 2017.

Carcosa 6மலாயா (மலேசியா) பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று கடந்த ஆகஸ்ட் 31-துடன் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன.

மலேசியாவின் சுதந்திரம் தங்கத் தாம்பாலத்தில் தரப்படவில்லை. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்கள் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட உயிர்களில் ஒன்று இந்நாட்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, பிரிட்டீஷ் பேரரசை ஆட்டம் காண வைத்த, அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் (பிஎம்எப்டியு) தலைவர் எஸ். எ. கணபதி. அவரைப் போல், இந்நாட்டின் அனைத்து இனங்களையும் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் குண்டு வீச்சுகளால் கொல்லப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் தூக்கிலிடப்பட்டனர். பலர் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நாடுகடத்தப்பட்டனர், சிறுவர்கள் உட்பட.

பிரிட்டனுக்கு எதிரான மலேசிய மக்களின் சுதந்திரப் போராட்டம் 1946 ஆம் ஆண்டில் தொடங்கவில்லை. அதற்கு முன்னதாக, பல பத்தாண்டுகளுக்கு முன்னதாக, பல்லினங்களையும் சார்ந்த இடதுசாரிகள், தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமத்து மக்கள் ஆகியோர் பிரிட்டீஷ் எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினர். அதில் ஆயுதப் போராட்டமும் அடங்கும்.

ஏன் தீடிரென்று இந்த நினைவு அலைகள்?

கோலாலம்பூரில் இதுவரையில் நடக்காத சம்பவம் ஒன்று செப்டெம்பர் 1 இல், நடந்தேறியது.

அன்றைய தினத்தில், மலேசியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சிக் கோட்டையாக விளங்கிய கார்கோசாவில் (Carcosa) (தற்போது Carcosa Seri Negara) இந்த பிரிட்டீஷ் எதிர்ப்பு பற்றிய வரலாற்று கண்காட்சி நெகிரி செம்பிலான யாங் டி-பெர்துவான் பெசாரால் திறந்து வைக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம் பற்றி இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கண்காட்சிகளோடு ஒப்பிடுகையில் கார்கோசாவில் நடத்தப்படும் இக்கண்காட்சி முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

இந்தியப் பாட்டாளி மக்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியது மற்றும் அவர்கள் செய்த தியாகங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தொழிற்சங்கத் தலைவர் எஸ். எ. கணபதி பிரிட்டீஷாரால் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டது சம்பந்தமான ஆவணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பிரிட்டனுக்கான இந்திய ஹைகமிஷனர் வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக பிரிட்டீஷ் பிரதமர் அட்லி, கணபதியின் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெறும்படி மலாயாவின் பிரிட்டீஷ் ஹைகமிஷனர் ஹென்றி கர்ணிக்கு பணித்திருந்த “டெலிகிராம்” இங்கே இடம்பெற்றுள்ளது.

carcosa 7இக்கண்காட்சியில் இன்னொரு முக்கியமான வரலாற்றுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 1941 இல், கிள்ளான் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம். இப்போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் சிஐஎஎம் என்ற இந்திய அமைப்பின் உறுப்பினர் ஆர்.எச்.நாதன். இவரது பெயர் பலருக்குத் தெரியும். ஆனால், அவரது படத்தை யாரும் பார்த்ததில்லை. அவரது படம் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

கிள்ளானில் உயிர் நீத்த சுங்கை செடு மற்றும் மிட்லேண்ட்ஸ் ஆகிய தோட்டங்களின் 5 தொழிலாளர்கள் – ஏழுமலை, கோனேரி, மாயாண்டி, அங்கப்பன், ரெங்கசாமி ஆகியோரின் பெயர்களும் இங்கே பதியப்பட்டுள்ளன.

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் பற்றிய பல தகவல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி நடத்தப்படும் கார்கோசா பிரிட்டீஷ் ஆட்சியின் மன்னர் மாளிகை (King’s House) ஆகும்.

Carcosa 4பெற்றோர்களே, ஆசிரியர்களே, இக்கண்காட்சி இந்நாட்டின் சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் நடத்திய போராட்ட வரலாற்றை திரும்பிப் பார்க்க நமக்கும். நமது இளஞ்சந்ததியினருக்கும் ஓர் அரிய வாய்ப்பை அளிக்கிறது. அவர்களை இக்கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நமக்காக, அவர்களுக்காக தூக்கில் தொங்கிய கணபதி, சுட்டுக்கொல்லப்பட்ட வீரசேனன் மற்றும் பல தியாகிகளை அவர்களுக்கு காட்ட வேண்டும்.

இக்கண்காட்சி கோலாம்பூர், ஜாலான் மெர்டேக்காவில் செப்டெம்பர் 1 லிருந்து 30 ஆம் தேதி வரையில் தினமும் காலை மணி 8.00 லிருந்து மாலை மணி 5

வரையில் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்படும்.