பி.எஸ்.எம். ஜெயக்குமாரை ‘சாகடிப்பதில்’ டிஏபி-க்கு மகிழ்ச்சியா?

  • ஃபிரான்சிஸ் பால் சியா, மாற்றத்திற்கான இயக்கம், சரவாக் (எம்.ஓ.சி.எஸ்.) 

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தலைவர்கள் மற்றும் சில பக்காத்தான் ஹராப்பான், குறிப்பாக பேராக் டிஏபி ஆகியவற்றிற்கு இடையேயான ஆழ்ந்த விரோதத்தைப் பற்றி, கடந்த சில மாதங்களாக நான் கேட்டு, படித்து நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன்.

14-வது பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம்.-ஐ எதிர்க்கட்சி கூட்டணியில் இணைத்துகொள்ள பெர்சத்து, பிகேஆர் மற்றும் அமானா தலைவர்கள் பலருக்கு மகிழ்ச்சியே; ஆனால், இங்கு முக்கிய இடறலாக இருப்பது டிஏபியாக இருக்கலாம், பேராக் டிஏபி தலைமை.

இங்கு என் கணிப்பு தவறாக இருக்கலாம், நான் ஒருதப்பட்சமாக இருப்பதாக பேராக் டிஏபி என் மீது குற்றம் சுமத்தலாம், நான் அதை ஏற்க தயாராக இருக்கிறேன்.

ஆனால், எனக்கு ஒரு கேள்வி உள்ளது. பி.எஸ்.எம்.-இன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ்-ஐ ஊடகத்தில் தாக்கி பேசியது, எழுதியது யார்? டிஏபி பேராக் மாநிலத் தலைவர் இங்கா கோர் மிங் மற்றும் அவரது நெருங்கிய, கட்சித் தோழர், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன் இருவரும்தானே, குறிப்பாக.

இதில் புரிந்துகொள்ள கடினமானது ஏதும் இல்லை. சுங்கை சிப்புட்டை மீண்டும் பேராக் டிஏபி எடுத்துகொள்ள விரும்புகிறது, சிவநேசன் அந்த நாடாளுமன்றத் தொகுதியை  நீண்டகாலமாக கண்கானித்து வருகிறார்.

ஆக, தாய்ப்பாலுக்காக அடித்துகொள்ளும் குழந்தைகளைப் போல, சுங்கை சிப்புட் மீதான அவர்களின் கூற்றை நியாயப்படுத்துவதற்காக, இங்காவும் சிவநேசனும் ‘பாட்டிக் கதை’களைக் கூறி, பி.எஸ்.எம். மற்றும் ஜெயக்குமார் மீது பல தவறுகளை அள்ளிவீசி வருகின்றனர்.

நான் சுங்கை சிப்புட்டுக்குச் சென்றதில்லை, அத்தொகுதியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், ஓர் உண்மை எனக்கு தெரியும்.

மஇகா தலைவர் ச. சாமிவேலுவை, அவரது அரசியல் கோட்டையில் இருந்து விலக்க மற்ற டிஏபி வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில், ஜெயக்குமார் ஒருவர் மட்டுமே அவரைத் தோற்கடித்த வேட்பாளர் ஆவார். ஒரு காலத்தில், டிஏபி-யின் மிகவும் பிரபலமான இந்தியத் தலைவரான பி. பட்டுவால் கூட, அந்த ம.இ.கா. பெரும் தலைவரை அசைக்க முடியவில்லை.

ஆமாம், அதற்கான வெகுமதியை நான் ஜெயக்குமாருக்குக் கொடுப்பேன், அவர் அதற்குத் தகுதியானவர்.

2008-ஆம் ஆண்டு, பிகேஆர் டிக்கெட்டில், சுங்கை சிப்புட் எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஜெயக்குமார் ஒரு முன்மாதிரி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி வருகிறார். நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒழுங்காக பங்கேற்கும் ஓர் எம்பி அவர், மக்களுக்காக சோர்வின்றி பணியாற்றி வரும் ஓர் எம்பி-யும் அவர் என்று கூறப்படுகிறது. டாக்டர் என்ற முறையில், ஜெயக்குமார் தனது தொகுதியில், இலவச மருத்துவச் சேவைக்காக நன்கு அறியப்பட்டவர்.

ஜெயக்குமாரைத் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது, கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் தெருவில், கையில் ஒரு பையை வைத்துகொண்டு, எளிய உடையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் தனியாக இருந்தார், மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கவில்லை. அவரை ஏற்றிச்செல்ல ஆடம்பர கார்கள் இல்லை. தான் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு தலைவர் என்பதை, அவர் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்.

இங்கு, எனக்கு தெரிந்த சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், திடீரென்று மாறி போனதை நான் நேரிடையாகப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை வெளிப்படையாக என்னால் உணரமுடிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சிலாங்கூர் மந்திரி பெசார் காலித் இப்ராஹிம் தலைமையில், ஷா ஆலாமில் நடந்த ஒரு பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு வணிக நண்பனால் நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

இரண்டு எதிர்க்கட்சி எம்பி-க்கள், அதில் ஒருவர் ஓராண்டுக்கு முன்னர்தான் எம்பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆடம்பரக் காரில், ஓட்டுநர் உதவியோடு வந்து சேர்ந்தனர். காரில் பின் இருக்கையில் விஐபி-யைப் போன்று அமர்ந்து வந்தனர், ஒருவர் வந்து கதவைத் திறந்துவிடும்வரை, அவர்கள் காரிலிருந்து இறங்கவே இல்லை. வாவ், மிக நேர்த்தியாக! அது, ஆக அதிகமான விஐபி போக்கைப் படம் பிடித்து காட்டியது.

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், பொது மக்களிடையே அவர்கள் காட்டிய ஆடம்பரப் போக்கு எனக்கு வெட்கமாக இருந்தது, தனிப்பட்ட முறையில் அவர்கள் இருவரையும் எனக்கு தெரியும்.

ஆக, பாரிசானோ ஹராப்பானோ, இரண்டு தரப்பு அரசியல்வாதிகளும் ஒன்றுதான் என்று இகழ்பவரை நாம் குற்றம் சொல்லமுடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று பலருக்கு புரியும் என நான் நம்புகிறேன்.

ஜெயக்குமாருக்காக, டிஏபியிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை மற்றும் நேர்மையான சுங்கை சிப்புட் எம்.பி.யைக் “சாகடிப்பதில்” அக்கட்சி மகிழ்ச்சியடைகிறதா?

நிரூபிக்கப்பட்ட, கடின உழைப்பாளியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இடமளிக்க, டிஏபி ஒரே ஓர் இடத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? அக்கட்சியில் ஏற்கனவே 38 எம்.பி.க்கள் உள்ளனர், அவர்களில் சிலர் ஜெயக்குமாரின் “தரத்தில்” – பொது சேவையில் அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் தனித்தன்மையில் அவருக்கு அருகில்கூட இல்லை.

உண்மையில், சில டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் “காலம் கடந்துவிட்டனர்” என்று நான் நினைக்கிறேன், அவர்களிடம் இந்த உண்மையாகத் தெரிவிக்க வேண்டும், அது அவர்களைக் காயப்படுத்தினாலும் கூட.

சிலாங்கூர் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர், அவர் என்னுடைய நண்பரும்கூட, சில டிஏபி தலைவர்களின் திமிரைப் பற்றி, குறிப்பாக பேராக் டிஏபி ‘போர்வீரர்கள்’ இங்கா கோர் மிங் மற்றும் அவரது உறவினர் இங்கே கூ ஹாம் பற்றியும் என்னிடம் புகார் செய்துள்ளார்.

மறுபடியும், அந்த டிஏபி உறவினர்களை எனக்குத் தெரியாது என்பதை நான் இங்குக் கூறிக் கொள்கிறேன். ஆனால், பேராக் டிஏபியில் தங்கள் அதிகாரத்தைத் ‘துஷ்பிரயோகம்’ செய்பவர்கள் பற்றி நீங்கள் கேட்டால், அதில் சில உண்மைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

பேராக் டிஏபி, குழு அமைப்பு முறையில் இயங்குவதாக, நான் முடிவு செய்யவில்லை என நம்புகிறேன். உறவினர் வட்டத்திற்குள் இருப்பவர்கள், கட்சி வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று, நன்மையடைகின்றனர்.

ஆனால், அரசியலில் குழு அமைப்பு முறையில் இயங்குபவர்களின் அபாயங்கள் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2009-ல் அரசியலமைப்பில் ஏற்பட்ட நெருக்கடி, ஒரு வலி நிறைந்த பாடம். டிஏபியின் சட்டமன்ற உறுப்பினர் ஹீ யிட் ஃபோங் பாரிசானில் நுழைந்ததன் விளைவால், பேராக் மாநில ஆட்சியைப் பக்காத்தான் ரக்யாட் இழந்தது.

இரண்டு தவணைகளாக, ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹீ, பேராக் டிஏபியால் தான் ஓரங்கட்டப்பட்டதாக ஆத்திரப்பட்டார், அதற்கு பொறுப்பாளிகள் இங்கா பங்காளிகள்’ எனவும் அவர் கூறினார்.

நாம், ஹீ ஒரு “துரோகி”, ஒரு “தவளை” என்றெல்லாம் சொன்னோம், ஆனால் திரும்பிப் பார்த்தால், ஹீ ‘கோர் மிங் / கூ ஹாம் குழு’வில் இருந்தால் பக்காத்தான் அரசாங்கம் நிச்சயம் வீழ்ச்சியடையும்.

2009-ல் செய்த தவற்றை, பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் செய்யக்கூடாது.

உண்மைதான், டிஏபி ‘பெரிய அண்ணன்’ தான், பி.எஸ்.எம். ஒரு ‘கொசு’தான், பேராக் டிஏபி-க்கு ஓர் அரசியல் எரிச்சலாக இருக்கிறதோ, ஒருவேளை.

சரவாக்கில் எஸ்.யு.பி.பி. அல்லது சபாவில் பி.பி.ஆர்.எஸ். போன்ற சிறு பிஎன் கூட்டணிக் கட்சிகளைப், ‘பெரிய அண்ணன்’ அம்னோ எப்படி கேலி செய்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஓர் எஜமான் லேசாக முணுமுணுத்தால் போதும். அவனுடைய நாய்கள் உடனே அவனை நோக்கி ஓடி வரும். இங்கே ஒரு ஒற்றுமையை நம்மால் காண முடிகிறதா?

இறுதியாக, பி.எஸ்.எம். தலைவர்களுக்கு எனது வேண்டுகோள், ஜிஇ 14-ல், ஹராப்பானின் மிக முக்கியமான முயற்சியை அடைய உதவுவீர்கள் என நம்புகிறேன், மலேசியாவுக்காக, மலேசியர்களுக்காக.

சுங்கை சிப்புட்டைக் கைப்பற்ற ஜெயக்குமாருக்கு ஒரு வாய்ப்பைப் பெற முடியும் என்றால், வரவிருக்கும் தேர்தலில் மற்ற இடங்களை விட்டுக்கொடுப்பதில் அவமானம் இல்லை.

ஒன்றுமே இல்லாததை விட, ஒரு எம்.பி.-யாவது இருக்க வேண்டும்.

விளையாட்டின் இந்தக் கட்டத்தில், மாற்றத்திற்காக நீண்ட காலமாக ஏங்கிக் கிடக்கும் மக்கள், ஓர் ‘ஐக்கிய அணி’யை என்று மட்டுமே விரும்புவதால், ‘மூன்றாவது அணி’ பற்றி கனவு காணாதீர்கள்.

ஒரு சோசலிசவாதியாக இருப்பதால், ஜெயக்குமாருக்கு ஆதரவளிக்க மறுக்கும் சிறிய குழுவினருக்கு, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன், “ஜெயக்குமார் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தாலும்கூட, அவர் என் வாக்கைப் பெறுவார்”. ஊழல் மிகுந்த ஜனநாயகக் கட்சியை விட, ஒரு சோசலிச அல்லது கம்யூனிஸ்ட் கட்சி மேலானது.