பழைய கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை கொண்டாட்டம்

நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளான இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தேவையற்ற பொருட்களை எரித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னை:
மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துகின்றனர். பொருட்களை எரித்து, மேளம் அடித்து சிறுவனர்கள் உற்சாகமாக போகியை வரவேற்றனர்.
அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காலையில் விடிந்து வெகுநேரமாகியும் எதிரே வாகனங்கள் செல்வது கூட தெரியாத அளவிற்கு மூடுபனி மற்றும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அதிகாலை முதலே தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரம் குவித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் எழுந்தது. இதன் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு பனிப்புகை சூழ்ந்தது.
இதனால் காற்று மாசு அதிகரித்துள்ளது. புகை மூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக பயணித்தனர்.
பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது. புகை மூட்டம் மற்றும் பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம் ஆனது.
போகி பண்டிகை அன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்க வேண்டாம் என, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.