சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் கடந்த 2016-ல் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறைகடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 19-ம் தேதி பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனஅறிவித்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக இருவரும் டிச.21-ம் தேதி (நேற்று) ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(1)(இ)-ன்கீழ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி (64.90 சதவீதம்) அளவுக்கு சொத்து குவித்ததாக இருவர் மீதான குற்றச்சாட்டும் அரசு தரப்பில் சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழமை நீதிமன்றம் இதை சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலாரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

 

 

-ht