கடத்தல் சந்தேகத்தால் பிரான்ஸிலிருந்து மும்பை வந்தடைந்த பயணிகளிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் விசாரணை

பிரான்ஸில் கடந்த 4 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகள் விமானம் இன்று (டிச.26) அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது. இந்நிலையில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பயணிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தியர்கள் உள்பட 303 பயணிகளுடன் சென்ற விமானம் ஆள்கடத்தல் தொடர்பான சந்தேகத்தின் பேரில், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மூன்று நாட்கள் விசாரணைக்கு பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் இன்று மும்பை வந்து சேர்ந்துள்ளது. இந்த விமானத்தில், 276 பயணிகள் மும்பைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 25 பேர் பிரான்சிலேயே தங்கிவிட்டனர் என்றும் அவர்கள் அங்கே தஞ்சம் புக விருப்பம் தெரிவித்தனர் என்றும் பிரெஞ்சு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் எழுந்ததால், இந்தியா வந்தப் பயணிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளைத் தவிர்க்க முயன்றனர். இந்த விமானத்தில், பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்றும் இந்தி மற்றும் தமிழ் பேசக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியப் பயணிகள் வீடு திரும்புவதற்கும் உதவியவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க: கடத்தல் சந்தேகம் காரணமாக பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் மும்பை வந்தடைந்தது.

 

 

-ht