தனியார் வேலைகளில் 80% இடஒதுக்கீடு

கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அம்மாநில இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80% இடஒதுக்கீடு கொண்டுவரப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் கோவாவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “கோவா மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாமை பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினையை கொரோனா நெருக்கடி மேலும் மோசமாக்கியுள்ளது.

கொரோனாவால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். பல இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு வெளியேறுகின்றனர். நாம் இங்கேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நல்ல நோக்கங்கள் கொண்ட நேர்மையான அரசுதான் உங்களுக்கு வேண்டும்.

கோவாவில் அரசு வேலைவாய்ப்புகளில் மாநில மக்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்புகளில் கோவா இளைஞர்களுக்கு 80% இடஒதுக்கீடு வழங்க நாங்கள் சட்டம் கொண்டுவருவோம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இளைஞருக்காவது வேலைவாய்ப்பை உறுதி செய்வோம்.

வேலை கிடைக்கும் வரை மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்குவோம். சுற்றுலாத் துறையை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இதேபோல சுரங்கத் துறையை நம்பியுள்ள குடும்பங்களுக்கும் மாதம் ரூ.5000 உதவுத் தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

(நன்றி TAMIL SAMAYAM)