கி. சீலதாஸ் – பெர்லிஸ் மாநில முஃப்டி(Mufti) டத்தோ டாக்டர் முகம்மது அஸ்ரி ஜைனல் அபிடீன் இந்திய பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையைக் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவை நியாயமானவையா என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
தெருவோரக் குற்றச்சாட்டுகள்
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு என்பதை நாம் அறிவோம், மற்றும் இந்தியா இஸ்லாமிய எதிர்ப்பு நாடு என்று அறியப்படுகிறது என்கிறார் முகம்மது அஸ்ரி. அதோடு இந்தியா முஸ்லிம்களை அடக்குமுறைகளின் வழி நடத்துவதாகவும் கூறுகிறார். முஸ்லிம் பெண்களை இந்தியர்கள் கற்பழிக்கிறார்கள். மாட்டிறைச்சி உண்போரையும் தாக்குவது மற்றும் ஏனைய கொடுமைகளுக்கு முஸ்லிம்கள் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதே அவரின் குற்றச்சாட்டு.
அவர் அடுக்கடுக்காகப் பதித்திருக்கும் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்பதைக் கூர்ந்து கவனித்தால் இதுபோன்ற தெருவோரக் குற்றச்சாட்டுகள் புதுமையானவை அல்ல என்பது புலப்படும்.
முகம்மது அஸ்ரியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. வெறுப்புணர்வைச் சீண்டிவிடும் தன்மையுடையது
மேற்கு நாடுகளிலும் அமெரிக்காவிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பவனிவருவது ஒன்றும் புதிதல்ல. அதோடு, முகம்மது அஸ்ரி மற்றும் பல ஊடகங்களின் வெளிப்படையான நோக்கம் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது அவர்களின் வன்மம் யாவும் பிரதமர் நரேந்திர மோடியின் மீதும் அவர் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மீதுதான் என்பது புலப்படும்.
முகம்மது அஸ்ரி இஸ்லாமிய விவகாரங்களில் நிபுணர். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார். எனவே, அவர் எதிலும் நியாயமாகவும் நேர்மையுடனும் செயல்படுவார் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
அவர் சொல்லுவதில் நியாயமும் நேர்மையும் இருக்கும் என்று மக்கள் நம்புவார்கள். அவரின் கருத்து உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என மக்கள் நம்புவார்கள் என்பது திண்ணம். இவையாவும் மனத்தில் கொண்டு அஸ்ரியின் கருத்துக்களை எடைபோடும் போது உண்மையான நிலவரங்களுக்கு மதிப்பளித்தாரா என்று கேட்கத் தோன்றும்.
அவர் சொல்லுவதில் நியாயமும் இல்லை நேர்மையும்இல்லை
முதலில், இந்தியா இஸ்லாத்திற்கு எதிரான நாடு என்கின்ற அவரின் குற்றச்சாட்டு ஏதாவது உண்மை இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
1947ஆம் ஆண்டு இந்தியா இரண்டாகப் பிரிந்தது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை வேண்டுமெனப் பிடிவாதமாக இருந்தவர் முகம்மது அலி ஜின்னா. அவர் தலைமையில் இயங்கிய முஸ்லிம் லீக் கட்சியும் அந்த நிலையிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லை.
அதுமட்டுமல்ல, ஹிந்துக்களும் முஸ்லிம் ஒன்றாக வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். இதையே ஜின்னா வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கூட பாகிஸ்தானில் அத்தகைய கருத்து நிலவுவதை அந்த நாட்டு இராணுவ தளபதி வலியுறுத்துகிறார். ஒரு வகையாகப் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டு அது அமல்படுத்திய போது புது பாகிஸ்தானின் மக்கள் தொகையில் (இது மேற்கு கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்). இந்துக்கள் விழுக்காடு ஏறத்தாழ 20.5% இருந்தது. 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவின் நிலை எப்படி இருந்தது? 1947ஆம் ஆண்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பது மில்லியனாக இருந்தது. 2022ஆம் ஆண்டு எண்ணிக்கையின் படி இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் – 200 மில்லியனைத் தாண்டிவிட்டது.
இந்தியா இஸ்லாத்திற்கு எதிரானது என்பதில் கடுகளவு உண்மை இருந்தால் இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்ந்திருக்குமா? அவர்கள் எப்போதே வேறு நாடுகளுக்கு; குறிப்பாக, பாகிஸ்தானுக்கே புலம்பெயர்ந்திருப்பார்கள் என்று சொல்லுவதில் தவறு இல்லையே.
இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் – 200 மில்லியனைத் தாண்டிவிட்டது.
இஸ்லாமியர்களுக்கு எதிரிகள் என்றால் இந்தியாவின் உயர் பதவிகளுக்கு அவர்களை அமர்த்தி அழகு பார்ப்பார்களா இந்தியர்கள்? 1967-1969ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மூன்றாம் அதிபராகத் திகழ்ந்தார் சாகீர் உசேன். பலமுறை தற்காலிக இந்தியத் துணை அதிபராகப் பணியாற்றியவர் முகம்மது ஹிதயத்துல்லா. 1979ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை அவர் இந்தியாவின் துணை அதிபராகப் பணியாற்றினார். அதோடு, அவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
1974ஆம் ஆண்டிலிருந்து 1977ஆம் ஆண்டு வரை இந்திய அதிபராக இருந்தவர் ஃபக்குநதீர் அலி அகமது. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு தமிழரான APJ அப்துல்கலாம் இந்திய அதிபராகச் சேவையாற்றியதையும் காண முடிந்தது.
இதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது இந்தியா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று சொல்லுவோர் பாகிஸ்தானில் இத்தகைய பரந்த மனப்பான்மை நிலவியதா என்பதை விளக்குவார்களா?
எனவே, முகம்மது அஸ்ரியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. வெறுப்புணர்வைச் சீண்டிவிடும் தன்மையுடையது என்று சொல்லுவதில் தயக்கம் கிடையாது.
அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு. எனவே, ஓர் இஸ்லாமிய நாடு என்ற முறையில் அதைத்தான் ஆதரிக்க வேண்டும் எனக் கூறுவது விவேகமான அணுகுமுறையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்னும் விளக்க வேண்டுமானால், ஒரு வெளிநாட்டு விவகாரங்களில் மனித நேய நோக்குடன் தலையிடும் போது உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் சமயப் பிரச்சனைக்கு மட்டும் மதிப்பளிப்பது தேவையற்ற பகையை வளர்க்க வழிகோலும்.
இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தானைக் கண்ட முஸ்லிம் சகோதரர்கள் சகோதரத்துவத்துடன் சுகமாக வாழ்கிறார்களா? கிடையாது. மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த காலகட்டத்தில் உருது மொழி பேசும் மேற் பாகிஸ்தானியர்கள், வாங்கள மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானியர்கள் மீது நிகழ்த்திய அடுக்குமுறை தாங்க முடியாததால் போராட்டம் நடத்தி வங்காள தேசம் கண்டனர். இந்தப் போராட்டக் காலத்தின் போது இனப்படுகொலை, பெண்கள் கற்பழிப்பு நடந்ததாக வரலாறு சொல்லுகிறது.
இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி நல்கிய உதவி வங்காளத் தேச முஸ்லிம்களைக் காப்பாற்றியது.
முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்குக் கொடுமையான தீமையை விளைவிக்கிறார்கள் என்பதைக் கண்ட அன்றைய கிழக்கு பாகிஸ்தானியர்கள் (இன்றைய வங்காள தேசிகள்) யார் உதவியை நாடினார்கள்? சமயச் சார்பற்ற ஹிந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவை, அப்போது இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி நல்கிய உதவி வங்காளத் தேச முஸ்லிம்களைக் காப்பாற்றியது.
இந்த உண்மைகளை முகம்மது அஸ்ரி அறிந்திருப்பாரா என்பதே கேள்வி. வரலாறு அறியாமல் குற்றம் சாட்டுவதை மட்டும் கலையாகக் கொண்டு வாழ்வது நாகரிகமும் அல்ல, கல்விமான் என்ற தகுதிக்குப் பொருந்தாதவையாகும்.
இது ஒரு புறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் பதற்ற நிலைமைக்கான காரணத்தை முகம்மது அஸ்ரி தொடாதது ஆச்சரியமே. 22.4.2025 ஆம் நாள் காஷ்மீரிலுள்ள பகல்காமில் 26 அப்பாவி ஹிந்துக்களைக் கொன்றதானது கவனத்தைக் கவரவில்லையே. இந்துக்களின் உயிருக்கு மதிப்பில்லையா என்று கேட்கத் தோன்றுமே! பதில் கிடைக்குமா?
இந்தியாவின் நிலைமை என்ன? அந்தப் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கிறது. அவர்களை ஆதரிக்கிறது என்பதாகும். அதைத் தடுப்பது தான் இந்தியாவின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும் என இந்தியா கோருவதில் நியாயம் இருக்கிறது.
மேற்கத்திய நாடுகள் இந்தப் பதற்றத்தைச் சீன மேலை நாடுகளின் ஆயுதப் போட்டியின் சோதனையாகக் கருதுவதும், விளம்பரப்படுத்துவதும் கேவலமான செய்கையாகும். இதைப் பார்க்கும் போது அழிவு சாதனங்களை உற்பத்தி செய்வது இப்பொழுது ஒரு சிறந்த வியாபாரமாகத் திகழ்கிறது. உலகத்திற்கு இது நன்மை பயக்குமா?
இதுபோன்ற கருத்துகளில் கவனம் செலுத்தாமல் போருக்கு உற்சாகம் காட்டும் நடவடிக்கை உலக அமைதிக்கு மட்டுமல்ல மனித வாழ்வுக்கும் உதவாது. இந்தியா இஸ்லாத்தை எதிர்க்கும் நாடு என்பது தவறான கருத்தாகும்.