யாரும் துன்புறுத்தப்படக் கூடாது

Domestic Violence Act-ஆண்-பெண் சம நிலைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு

கடந்த இரண்டு வாரங்களில் கெடா அலோர் ஸ்டாரில் ஒரு மாது கொலை செய்யப்பட்டார். இன்னொருவர் பெர்லிஸ் கங்காரில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்த சம்பவங்களுக்கு பொறாமை அடைந்த கணவர்களே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

2013 ஜனவரி 7 கோஸ்மோவில் வெளியான செய்தி: கங்காரில் 27 வயது மாது ஒருவர் அவரது கணவரால் நாற்காலி, குழவி, படச் சட்டங்கள், கத்தி ஆகியவற்றால் தாக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரணம் அந்த மாது மாற்றானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கணவர் சந்தேகப்பட்டதாகும்.

2012 டிசம்பர் 29 தி ஸ்டாரில் வெளியான செய்தி: அலோர் ஸ்டாரில் 17 வயது மாது ஒருவரை அவரது கணவர் கூர்மை இல்லாத பொருள் ஒன்றைக் கொண்டு சாகடித்துள்ளார். காரணம் அந்தப் பெண் இன்னொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கணவர் சந்தேகித்ததாகும்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு பல துன்பங்களை எதிர்நோக்குகின்றனர்.  மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கும் கொலை செய்யும் அளவுக்கும் நிலைமை விரிவடைவதற்கு முன்னர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.

மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் தாம் வாரந்தோறும் அடிக்கப்பட்டதாக கங்காரைச் சேர்ந்த 27 வயது மாது கூறியிருக்கிறார். ஆகவே குடும்பம், போலீஸ், மருத்துவர்கள் அல்லது சமயத் தலைவர்கள் தலலயிடுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மூவாயிரம் முதல் நான்காயிரம் குடும்ப வன்முறை சம்பவங்கள் பற்றி அறிவிக்கப்படுகின்றன. உண்மையான சம்பவங்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால் அந்த எண்ணிக்கை மிகவும் சிறியது என்பதில் சந்தேகமே இல்லை.

மலேசியாவில் 36 விழுக்காடு பெண்கள் குடும்ப வன்முறைக்கு பலியாகி உள்ளதை பெண்கள் உதவி நிறுவனம் (WAO) மேற்கொண்ட ஓர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. அந்த ஆய்வு 1995ல் நடத்தப்பட்டிருந்தாலும் மற்ற நாடுகளில் நிகழ்கின்ற குடும்ப வன்முறைகள் பற்றிய அதே காலத்திய ஆய்வுகளுக்கு ஏற்ப அது அமைந்துள்ளது. அந்தப் பெண்களில் யாரும் துன்புறுத்தப்பட வேண்டிய, ஏன் சாகடிக்கப்பட வேண்டிய தேவையே இல்லை.

குடும்ப வன்முறைகளை தடுப்பதற்கு நாம் பங்காற்ற வேண்டும். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தைக் குறிப்பாக பின் வரும் பகுதிகளில் அரசாங்கம் மேம்படுத்த வேண்டும்:

2011ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட நல்ல திருத்தங்களை ( மன ரீதியிலான வன்முறையையும் குடும்ப வன்முறை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது, குடும்ப வன்முறையை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட்டுள்ளது) முறையாகவும் திறமையாகவும் அமலாக்க வேண்டும்.

இடைக்காலப் பாதுகாப்புத் தடைகள், தீங்கு செய்கின்றவர் ‘குடும்ப வன்முறையைப் பயன்படுத்துவதை’ தவிர்க்க  வேண்டும் (“dihalang daripada menggunakan keganasan rumah tangga”) எனச் சாதாரணமாகச் சொல்வதற்குப் பதில் தீங்கு செய்கின்றவர் என்ன செய்யக் கூடாது என்பதை விவரமாக விளக்க வேண்டும்.

அந்த சூழ்நிலைகள் பற்றி செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் பயன்படுத்துகின்ற வாசகங்களும் நமக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. “Wanita disyaki curang dibelasah” ( ஏமாற்றுவதாக சந்தேகிக்கப்படும் மாது அடிக்கப்பட்டார் ), “Rahsia kecurangan isterinya terbongkar” ( ரகசியம் அம்பலமானது: மனைவியை ஏமாற்றியவர்) போன்ற சொற்றொடர்கள் பாதிக்கப்பட்டவருக்கு அனுதாபம் காட்டுவதாகத் தெரியவில்லை.  மாறாக வன்முறை பொருத்தமானது, நியாயமானது என்ற ஏற்றுக் கொள்ள முடியாத எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

குடும்ப வன்முறை என்பது ஒரு குற்றமாகும். அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், சமூக உறுப்பினர்கள் என்ற முறையில் பேச வேண்டிய பொறுப்பு நமக்கும் உண்டு. துன்புறுத்தப்படுவதாக நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் நாம் உடனடியாக போலீசாரை அழைக்க வேண்டும். எந்தக் காரணமாக இருந்தாலும் யாரும் துன்புறுத்தப்படக் கூடாது.