தலைவா பட பிரச்னை: முதல்வர்தான் காப்பாற்ற வேண்டும்

thal“தலைவா’ பட பிரச்னையில் முதல்வர்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் கண்ணீர் மல்க கூறினார்.

பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நடுத் தெருவில் நிற்கும் நிலைக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:

தமிழ் திரையுலகில் நாணயமான தயாரிப்பாளராக செயல்பட்டு இதற்கு முன் 2 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த “தலைவா’ படத்தை தயாரித்து இருக்கிறேன்.

கடந்த 9-ஆம் தேதி படத்தை வெளியிட விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருந்தேன். படம் வெளியாக இருந்த இரு நாள்களுக்கு முன்பு திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெயிட அச்சம் காட்டினர். இதனால் படம் வெளியாகவில்லை.

ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் படம் வெளியானது. இதனால் இணையதளங்கள் வாயிலாகவும், திருட்டு சி.டி. விற்பனை மூலமாகவும் “தலைவா’ படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி விட்டது.

கடந்த சில நாள்களில் படம் வெளியாகி இருந்தால், ரூ.30 கோடியிலிருந்து ரூ.40 கோடி வரை படம் வசூல் செய்திருக்கும். இந்த நிலையில் இந்த வாரம்கூட படம் வெளியாக விட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாவேன். இந்த நஷ்டத்தால் நான் என் குடும்பத்துடன் நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்.

“தலைவா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதனால் தமிழக முதல்வர் மனமிறங்கி “தலைவா’ பட பிரச்னையில் தலையிட்டு படம் வெளிவர நடவடிக்கை எடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என சந்திரப்பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது “தலைவா’ படத்தின் இயக்குநர் விஜய் உடனிருந்தார். அவர் பேசும் போது, குறிப்பிட்ட சில வசனங்கள் இருப்பதாக வரும் செய்திகள் முழுக்க முழுக்க வதந்திதான். சத்யராஜின் கதாபாத்திரத்துக்கு அண்ணா என பெயரிடப்பட்டுள்ளது. இதில் எந்த வித அரசியலும் இல்லை. “தலைவா’ அரசியல் கதையும் அல்ல என தெரிவித்தார்.