தலைவா தயாரிப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி… -மருத்துவமனையில் சிகிச்சை

chandraprakash jainதலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

இம்மாதம் 9 ந் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய தலைவா பல்வேறு காரணங்களால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயக்கம் காட்டி வருவதால், முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஒரு படத்தை வெளியிடுவதோ, தடுப்பதோ அரசின் வேலையல்ல. இந்த படத்தை முதல்வர்தான் தடுக்கிறார் என்கிற தோற்றத்தை இங்கே வேண்டுமென்றே சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று அதிமுக தலைவர்கள் சிலர் முணுமுணுத்து வருகிற நேரத்தில், இவரது குரல் ஆட்சி மேலிடத்திற்கு எட்டவே இல்லை.

இந்த நிலையில் படத்தை வெளியிட கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டி சந்திரபிரகாஷ் ஜெயின், படத்தின் ஹீரோ விஜய், டைரக்டர் விஜய் ஆகியோர் தரப்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க, பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் ஜில்லா பட ஷுட்டிங் இன்று துவங்கியது. பின்னில் மில்லில் அவர் எதிரிகளை தாக்குவது போல படமாக்கப்பட்டு வருகிறது. இருக்கிற ஆத்திரத்தில் எந்தெந்த பைட்டர்களுக்கு நிஜ அடி விழப்போகிறதோ?