அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ

vijay-ajith-mankathaஅஜீத், விஜய் இணைந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அஜீத்தும், விஜய்யும் இணைந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் தங்களது படங்கள் மூலமும், பேட்டிகள் மூலம் மாறி மாறி பஞ்ச் டயலாக் அடித்து தங்களது ரசிகர்களை உசுப்பேத்திக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் சிறிய இடைவெளி ஏற்பட்டது என்று சொல்லலாம். இப்படி, ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த விஜய்யும் அஜீத்தும் இப்போது அவ்வளவு குளோஸ் ஆகிவிட்டார்கள்.

இந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்கும் விதத்தில் கதை எழுதி வைத்திருக்கிறேன், இருவரிடமும் கதையை சொல்லி விட்டேன் என்று இயக்குனர் வெங்கட்பிரபு சொன்னதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அஜீத்குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் நடித்தால் அந்த படத்தை தயாரிக்க நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய்யின் தலைவா பட ரிலீஸில் பிரச்சனை வந்தபோது அதை ரிலீஸ் செய்ய ஜே. அன்பழகன் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.