மீண்டும் த்ரில்லர் படத்தில் விஜய்சேதுபதி!

துணை கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், தேசிய விருது பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பீட்சா திரைப்படம் தான் நடிகர் விஜயசேதுபதியை தமிழ்த்திரையுலக ரசிகர்களிடத்தில் முன்னிலைப்படுத்தியது.

தற்போது கமிட் ஆகியிருக்கும் படங்கள் முடிவதற்கே ஒரு வருடம் ஆகும் என்பதால் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை என்று ஒவ்வொரு பேட்டியிலும் கூறும் அளவிற்கு பிஸியான ஆளானார் விஜய்சேதுபதி. ஆனாலும் விஜய்சேதுபதி புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டதாக ஒரு தகவல் சில நாட்களாக திரையுலகில் உலா வர, இப்பொழுது அந்த செய்தி உறுதியாகிவிட்டது.

பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய் சேதுபதி “நான் மெல்லிசை என்ற திரைப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். ரஞ்சித் மெல்லிசை திரைப்படத்தின் கதையை என்னிடம் சொன்னபோதே எனக்கு பிடித்துவிட்டது.இந்த படத்தின் கதை மிகவும் சுவாரசியமான த்ரிலர் கதை. நான் கமிட் ஆகியிருக்கும் படங்களில் முன்னுரிமை மெல்லிசை திரைப்படத்திற்குத்தான்” என்று கூறியுள்ளார்.

விஜய்சேதுபதியை அடையாளம் காட்டிய பீட்சா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஜய்சேதுபதியே நடிப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்களுக்கு மெல்லிசை திரைப்படம் ஆறுதலாக இருக்கும் என்று பேசப்படுகிறது.