இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்ததாக வதந்தி!!

samudrakaniசுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும், நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி. நடிகர், இயக்குநர் என மாறி மாறி பயணிக்கும் சமுத்திரகனியின் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று(மார்ச் 7ம் தேதி) ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் இப்படம் இன்று வெளியாகவில்லை.

இந்நிலையில், நிமிர்ந்து நில் படம் வெளியாகததால் மனமுடைந்து இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுக்க செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இதையடுத்து அவருக்கு ஏராளமானபேர் போன் செய்துள்ளனர். ஆனால் சமுத்திரகனி எப்பவும் போல் கூலாக பேசியுள்ளார். இதனையடுத்து அவர் இறந்ததாக வந்த செய்தி வதந்தி என்று தெரிந்தது.

இதுப்பற்றி சமுத்திரகனியிடம் போன் மூலம் தினமலர் நிருபர் விசாரித்தபோது அவர் அளித்த பதில், நான் தற்கொலை முயற்சி செய்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானவை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நபர்கள் உங்களைப்போன்று எனக்கு போன் செய்துள்ளனர். அவர்கள் எல்லோரிடத்திலும் நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி வருகிறேன். நிமிர்ந்து நில் படத்தை நான் நல்லபடியாக எடுத்து முடித்துவிட்டேன். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில நிதி சிக்கலால் படம் ரிலீஸாகவில்லை. இதற்காக எல்லாம் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். படத்தின் தலைப்பையே நிமிர்ந்து நில் என்று வைத்துள்ளேன். அப்படியொரு தலைப்பை வைத்துவிட்டு கோழைத்தனமாக நான் அந்த வேலையை செய்ய மாட்டேன். நான் தற்போது எனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார்.