தெனாலிராமன் திட்டமிட்டபடி தியேட்டருக்கு வருமா? வியூகம் வகுக்கும் தெலுங்கு அமைப்புகள்!

tenali01வடிவேலு கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் திரைப்படத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே தெலுங்கு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு, போராட்டமும் நடத்தி வருகின்றன.

ஆளும்கட்சிக்கு அஞ்சி வடிவேலுவுக்கு ஆதரவு தராமல் திரையலகினர் வேடிக்கைப் பார்க்க, சீமான், இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் வடிவேலுவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். அதைத்தொடர்ந்து விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.

வடிவேலுவுக்கு எதிராக தனித்தனியாக போராடி வந்த தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி ஆகிய இரண்டு தெலுங்கு அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளன.

அதுமட்டுமல்ல, வடிவேலுவுக்கு ஆதரவு தரும் சீமானையும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டன. அடுத்தகட்டமாக, இந்த இரு அமைப்பும் இணைந்து, தெனாலிராமன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

“தெனாலிராமன் படம் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கு அவர்கள் கிருஷ்ணதேவராயரை தவறாக சித்திரிக்கவில்லை என பதில் அளித்தனர்.

ஆனால், படத்தின் நாயகனான வடிவேலு, கிருஷ்ணதேவராயராகதான் நடிக்கவில்லை எனவும், வேங்கை மன்னன் என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால், தணிக்கைச் சான்றிதழில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய கதாபாத்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் மாறுபட்டவையாக உள்ளன.

வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கலாம். ஆனால், ஏ.ஜி.எஸ். நிறுவனம் கிருஷ்ணதேவராயரின் உண்மையை மறைத்து வணிக நோக்கத்துக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

அவர்களது சொந்தக் கருத்தில், உண்மை வரலாற்றை திரித்து, தவறான நிகழ்வை உருவாக்கி படத்தை தயாரித்துள்ளனர். மேலும் பட நிறுவனமும், இயக்குநரும் தெலுங்கு அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காண்பிப்பதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் ஏப்ரல் 18-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

எனவே, “தெனாலிராமன் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளுக்கு அந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று அவர்கள் தாக்க செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வுக்கு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் காரணமாக தெனாலிராமன் திட்டமிட்டபடி தியேட்டருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.