அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ்

prakash_raj_002ஐதராபாத்தில் கார் மீது பேருந்து மோதியதில் நடிகர் பிரகாஷ்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை நடிகர் பிரகாஷ் ராஜ், தனது குடும்பத்தினருடன் சாத்நகர் நோக்கி சென்றுள்ளார்.

மாதா பூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து பிரகாஷ்ராஜ் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதுபோல் பக்கத்தில் நின்ற இன்னொரு ஆட்டோவையும் அந்த பேருந்து இடித்து தள்ளியது. ஆட்டோ இன்னொரு காரில் மோதி அதுவும் சேதமானது.

இந்த விபத்தில் பிரகாஷ் ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காரில் இருந்த குடும்பத்தினரை உடனடியாக கீழே இறக்கி ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார்.

விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து பற்றிய தகவலை பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில், பயங்கரமான விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து தப்பியது அதிர்ஷ்டம்.

விபத்து நடந்தபோது கார் ஆட்டோக்களில் இருந்தும், மோட்டார் சைக்கிள்களில் இருந்தும் நிறைய பேர் கீழே விழுந்தனர். அவர்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. இது எனக்கு அதிர்ச்சியளித்தது.

குறிப்பாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் விபத்தை கைப்பேசியில் படம் எடுத்தனர். இதை பார்த்து வெட்கி தலைகுனிந்தேன் என்றும் உயிர் பிழைத்த பயத்தைவிட இளைஞர்கள் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறார்களே என்ற பயம்தான் எனக்கு அதிகமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.