கொடூரமான வில்லன் வேடத்தில் சரத்குமார்!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார், ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா-பிள்ளை போன்ற வழக்கமான இரட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன்-கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீரா நந்தன் என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இத்துடன் சமுத்திரக்கனி ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ராதாரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, வெண்ணிற ஆடை மூர்த்தி, நரேஷ், ஆதவன், சிங்கம்புலி, ஜார்ஜ், நளினி, ராம்குமார், கானா உலகநாதன், டெல்லி கணேஷ், மோகன்ராமன், ‘காதல்’ தண்டபாணி, ரேகா சுரேஷ், G.M.குமார், ‘சூப்பர் குட்’ கண்ணன், பிரபாகர், நடேசன், செல்வராஜ், பாபூஸ், ‘கராத்தே’ ராஜா மற்றும் முக்கிய வேடத்தில் புதுமுக வில்லனாக பெங்களூரை சேர்ந்த அருண்சாகர் அறிமுகமாகிறார்.

இப்படத்தை இயக்கும் பொறுப்பை A.வெங்கடேஷ் ஏற்றுள்ளார். N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பாக மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.