பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்தார் சூர்யா!

காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் ‘தூய்மை இந்தியா’ என்கிற திட்டத்தை துவங்கி வைத்தார்.

அத்துடன் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் அமீர்கான், சல்மான்கான், கமல் ஹாசன், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், சசிதரூர், அனில் அம்பானி, மிருதுளா சின்ஹா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். மோடியின் இந்த அழைப்பை கமல் ஹாசன், அமீர்கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்றுக்கொள்வதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.

மேலும் கமல் ஹாசன் கூறும்போது, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுவேன் என்றும் இந்த இயக்கத்தில் 90 லட்சம் பேரை இணைப்பேன் என்றும் தெரிவித்தார்.  இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள். ‘ஜெய் பாரதம், தூய்மை பாரதம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.