பணம் மட்டுமே நிறைவை தராது: அர்ஜுன்

எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது ஆகிய உயரிய கருத்தை ‘ஜெய்ஹிந்த் – 2 படம்’ மூலம் சொன்னதற்காக படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்ற தெம்பில் இருக்கிறார் அர்ஜுன்.

இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்…

“மே மாதம் வந்தாலே நிறைய பெற்றோர்கள் ஸ்கூல் பீஸ் கட்ட ஆலாய்ப் பறக்கிறதை பார்த்திருக்கிறேன் . சினிமா தொழிலாளர்கள் நிறைய பேர் பீஸ் கட்ட உதவி கேட்டு வருவதைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன், பாவமாக இருக்கும்.

கல்விங்கிறது அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சி. ஒருத்தனின் வளர்ச்சியையும், வருங்காலத்தையும் பணம் என்கிற காரணத்தைக் காட்டி தடுக்க நினைப்பது பாவமில்லையா. வசதியான வீட்டில் பிறந்த குழந்தைகளை விட ஏழை குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அந்த ஏழை குழந்தைகளுக்கும் கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த பதிவு.

நல்ல கருத்தை நல்ல கருத்தாகச் சொல்ல முற்பட்டால் டாக்குமென்டரி பீலிங் வந்துவிடும். அதற்காகத் தான் கமர்ஷியல் பார்முலாவை படத்தில் புகுத்தினேன். அதுதான் இன்று வெற்றியை கொடுத்திருக்கிறது. நான் நடிகனாக மட்டும் யோசிக்க வில்லை இரண்டு பெண்களுக்கு தகப்பனாகவும் யோசித்தேன், வசதி இருந்ததால் தான் எனது மகள்களை படிக்க வைத்தேன். வசதி இலையென்றால்…. நான் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன்.

‘ஜெய்ஹிந்த் 2’ படத்தின் அனுபவம், ஒன் மேன் ஆர்மி என்பார்களே! அப்படிதான் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என நான்கு பக்கமும் யோசிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிக்காகவும் உழைக்க வேண்டும், அப்பாடா என்று ஆகிவிட்டது. படம் வெளியாகி வெற்றி என்று ஆன பிறகு பட்ட கஷ்டமெல்லாம் சந்தோஷமாகி விட்டது.

நிறைய பெற்றோர்கள் ‘ஜெய்ஹிந்த் -2’ படத்தைப் பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள். அதனால் அடுத்தும் வேறொரு அழுத்தமான கதைக் களத்தோடு விரைவில் துவங்க உள்ளேன். பணம் மட்டுமே நிறைவை தராது, சமூகத்துக்கு நல்லதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போகிறேன்,” என்கிறார் அர்ஜுன்.