ரஜினி- ஷங்கர் கூட்டணியில் எந்திரன் 2–ம் பாகம்?

roboரஜினி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய பின் சில மாதங்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை.

அதன் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ படத்தில் நடித்தார். இது கடந்த மாதம் ரிலீசானது. இந்த படத்திலும் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு ‘லிங்கா’ பட வசூல் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார்.

தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் விரைவில் நஷ்டஈடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்துக்கான கதையிலும் ரஜினி கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அவரது புதுப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பி.வாசு, லிங்குசாமி ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. எந்திரன் 2–ம் பாகத்தில் இவர்கள் இணையப் போவதாக தகவல் பரவி உள்ளது.

ரஜினி படங்களில் எந்திரன் மெகா ஹிட் படமாக அமைந்தது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருந்தார். ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இந்த படம் ரூ.375 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தி, தெலுங்கிலும் வெளியாகி ரூ.45 கோடி வசூலித்தது.

இந்த படத்தின் 2–ம் பாகத்தை நிச்சயம் எடுப்பேன் என்று ஷங்கர் ஏற்கனவே கூறி இருந்தார். அதற்கான கதையையும் தயார் செய்துள்ளார். சமீபத்தில் ரஜினியும், ஷங்கரும் சந்தித்து பேசி ‘எந்திரன் 2–ம்பாகம்’ கதை பற்றி விவாதித்து உள்ளனர். எனவே இந்த படத்தில் ரஜினி நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-http://123tamilcinema.com