மகன் சிபியுடன் மீண்டும் இணைந்த சத்யராஜ்!

சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஜாக்சன் துரை.’

மிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி விநியோகஸ்தராக வலம் வந்து கொண்டிருப்பவர் எம்.எஸ்.சரவணன். ‘வேலையில்லா பட்டதாரி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கிசட்டை’, ‘கயல்’ போன்ற படங்களை விநியோகம் செய்திருக்கிறார். இவர் ‘மாசாணி’, ‘சலீம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவரும்கூட.

மேலும் விரைவில் வெளிவரவுள்ள பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘சண்டிவீரன்’ படத்தை தமிழகமெங்கும் தனது ‘ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ்’ சார்பில் வெளியிடவுள்ளார்.

தற்போது இவர் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார்.  ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர், சென்ற ஆண்டு வெளியான ‘பர்மா’ படத்தை இயக்கியவர். யுவா ஒளிப்பதிவு செய்கிறார். விபின் சித்தார்த் இசையமைக்கிறார்.

‘ஜாக்சன் துரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க, உடன் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

100 வருடங்களாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற தைரியமான போலிஸ் அதிகாரியொருவர் அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

-http://www.dinamani.com