தமிழ் சினிமாவின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’…தியாகராஜ பாகவதரின் 56வது நினைவு தினம்

thyagaraja-bhagavathar

01/11/2015, சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரின் 56 வது நினைவு தினம் இன்று. 1910 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியாவுக்கு, இளைய மகனாக தியாகராஜ பாகவதர் பிறந்தார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் (கர்நாடக சங்கீதம்) என்று பல்வேறு திறமைகளை கொண்ட தியாகராஜ பாகவதர் 1959 ம் ஆண்டில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் 1910 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியாவுக்கு இளைய மகனாக பிறந்தவர் தியாகராஜ பாகவதர். பாகவதர் பிறந்த சில வருடங்களிலேயே அவரது குடும்பம் திருச்சிராப்பள்ளிக்கு குடிபெயர்ந்தது.

அங்குள்ள ஒரு பிரபல பள்ளியில் பாகவதர் சேர்க்கப்பட்டார். அந்நாட்களில் பாடகராவது சுலபமல்ல எனினும் அவரது அப்பா கிருஷ்ணமூர்த்தி தனது மகனை, ஒரு சிறந்த கர்நாடக பாடகராக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். விரைவிலேயே ஹிந்து சமயத்தில் பாடல்களையும், பஜனைகளையும் தியாகராஜ பாகவதர் கற்றுத் தேர்ந்தார்.

ஆரம்ப நாட்களில்

தியாகராஜ பாகவதர் ஆரம்ப நாட்களில் பாடிய பாடல்களைக் கேட்ட ரயில்வே அதிகாரி எப்.ஜி. நடேச ஐயர், தியாகராஜ பாகவதரின் வளர்ச்சிக்கு உதவி செய்ய முன்வந்தார். தனது ரசிக ரஞ்சனா சபாவில் நடந்த அரிச்சந்திரா நாடகத்தில் லோகிததாஸாக பாகவதர் தந்தையின் சம்மதத்துடன் நடிக்க வைத்தார். நாடகமும் பாகவதர் ஏற்று நடித்த வேடமும் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது, பின்னர் அங்கிருந்த மூத்த நடிகர்கள் பாகவதருக்கு நடிப்பைக் கற்றுக் கொடுத்தனர்.

கர்நாடக சங்கீதம்

கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய மதுரை பொண்ணு அய்யங்காரிடம் 6 வருடங்கள் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார். 1934ம் வருடம் பாகவதர் பவளக்கொடி என்னும் நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். அந்த நாடகத்தை தொழிலதிபர் லட்சுமணன் செட்டியார் அழகப்ப செட்டியார் மற்றும் இயக்குநர் கே.சுப்ரமணியம் ஆகியோர் அந்த நாடகத்தைப் பார்த்து அதனை படமாக எடுக்க முன்வந்தனர்.

பவளக்கொடி

பவளக்கொடி திரைப்படம் 1934ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே பாகவதர் பெரிய நட்சத்திர நடிகராக மாறினார். தொடர்ந்து நவீன சாரங்கதாரா, சத்யசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக் குமார், சிவகவி, ஹரிதாஸ், ராஜா முக்தி, அமரகவி, சியாமளா, புது வாழ்வு மற்றும் சிவகாமி மொத்தம் 26 வருடங்களில் 14 படங்களில் நடித்தார்.

முதல் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை தியாகராஜ பாகவதரையே சேரும். இவர் நடித்த 14 படங்களில் 7 படங்கள் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்களாக மாறியது.

ஹரிதாஸ்

பாகவதரின் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் திரைப்படம் அந்நாட்களில் பிராட்வே தியேட்டரில் 3 வருடம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில்

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும், பாடல்களாலும் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதர் 1959 ம் ஆண்டு தனது 49 வயதில் மஞ்சள் காமாலையின் தீவிரம் காரணமாக இறந்து போனார்.

56 வது நினைவு தினம்

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என்றெல்லாம் புகழப்படும் தியாகராஜ பாகவதரின் 56 வது நினைவு நாள் இன்று.

திருச்சி சங்கிலியாண்டபுரம் ஓடத்துறையில் உள்ள தியாகராஜ பாகவதர் சமாதி, அரசு மரியாதை, நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் மரியாதை ஏதுமின்றி, இன்றும் அவரை சூப்பர் ஸ்டாராக மதிக்கும் மக்களின் மலர்களை சுமந்து கிடக்கிறது. அந்த மலர்மாலைகளுக்குள்ளே கோடானுகோடி ரசிகர்களின் அன்பும், மரியாதையும் கலந்திருப்பதை நீங்கள் திருச்சி போனால் இப்பொழுதும் காணலாம்…

tamil.filmibeat.com