பீப் பாடல் விவகாரம்: சிங்கம் 3 மற்றும் 2 புதிய படங்களில் இருந்து அனிருத் நீக்கம்

anirudh34562-600சென்னை: பீப் பாடல் விவகாரத்தால் சிங்கம் 3 மற்றும் வேறு 2 புதிய படங்களில் இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் அனிருத். கடந்த வாரம் இவரின் இசையில் வெளியான பீப் பாடலால் தற்போது அனிருத்தின் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. இந்தப் பாடலால் நாளுக்குநாள் இவருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இவர் இசையமைக்க இருந்த படங்கள் வேறு இசையமைப்பாளர்களின் கரங்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்தப் படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் அனிருத்தை ஒரே நாளில் உலகம் எங்கும் கொண்டு சேர்த்தது.

அனிருத் இசையமைப்பில் வெளியான எதிர் நீச்சல், மான் கராத்தே, வணக்கம் சென்னை, வேலை இல்லாப் பட்டதாரி,கத்தி, காக்கி சட்டை, மாரி, நானும் ரவுடிதான் மற்றும் வேதாளம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றன. இசையமைப்பாளராக அறிமுகமான 4 வருடங்களில் விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு அனிருத்தின் வளர்ச்சி இருந்தது.

அனிருத்தை தொடர்ந்து வளர்த்து விட்ட பெருமை நடிகர் தனுஷையே சேரும். 3 படத்தில் இருந்து தான் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களுக்கு அனிருத்தையே இசையமைப்பாளராக வைத்து அழகுபார்த்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான பீப் பாடல் அனிருத்துக்கு நீங்காத அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. பீப் பாடலால் தற்போது அனிருத்தின் எதிர்காலம் தமிழ் சினிமாவில் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது.இந்தப் பாடலால் நாளுக்குநாள் இவருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இவர் இசையமைக்க இருந்த படங்கள் வேறு இசையமைப்பாளர்களின் கரங்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறது.

சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தை சூர்யாவை வைத்து எடுக்கவிருக்கிறார் இயக்குநர் ஹரி. இந்தப் படத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கி இருக்கின்றன. சூர்யா நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சுருதிஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் சுருதிஹாசன் சிஐடி அதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.

ஏற்கனவே பல்வேறு காரணங்களால் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இதில் சொன்ன தேதிகளில் அனிருத் பாடல்களைத் தரவில்லை என்பதால் அவரை நீக்கி விட்டு தற்போது ஹாரிஸ் ஜெயராஜை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

சிங்கம் 3 படத்திற்கு தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பணியைத் தொடங்கி இருக்கிறார். சிங்கம் 3 படத்தைத் தவிர வேறு 2 புதிய படங்களில் இருந்தும் அனிருத் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அனிருத்தின் கையில் இருந்த தங்கமகன் திரைப்படமும் இன்று வெளியாகி விட்ட நிலையில்,வேறு புதிய படங்கள் எதுவும் அனிருத் கைவசம் இல்லை. இந்த விவகாரத்தில் தனுஷ் இதுவரை எதுவும் வாய் திறக்காத நிலையில் தனது அடுத்தடுத்த படங்களில் தனுஷ், அனிருத்திற்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக வளர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் கொலைவெறி பாடலால் வளர்ந்த அனிருத்தின் எதிர்காலம் தற்போது பீப் பாடலால் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.