சினிமா நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அவசியம்: நாசர்

201607180813448128_Training-is-necessary-acting-for-the-Actors-Nasser_SECVPF

நடிகர் சங்க தலைவர் நாசர் மகன் லுத்புதீன் ‘பறந்து செல்ல வா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கப்பூர் நடிகை நரேல் கெங் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தனபால் பத்மநாபன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-

“எனது மகன் லுத்புதீன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா படங்களும் நன்றாக ஓடவேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போல் இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். படங்களில் முதலீடு செய்பவர்கள் தற்போது குறைந்து வருகிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால் படங்கள் நன்றாக ஓட வேண்டும்.

சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு நடிப்பு பயிற்சி அவசியம். பயிற்சி பெற்றுத்தான் ஒவ்வொருவரும் நடிக்க வேண்டும். எனது மகனிடமும் நடிப்பு பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க வேண்டும் என்று கண்டிப்போடு கூறினேன். கதையின் நாயகனாகவே இந்த படத்தில் லுத்புதீன் வருகிறார். கதாநாயகன் வேறு, கதையின் நாயகன் வேறு. இந்த படம் எல்லோரும் ரசிக்க கூடிய காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் தற்போது நிறைய மாறுதல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதில் முக்கியமானது திறமையான இளைய இயக்குனர்கள் வருகை. இளம் டைரக்டர்கள் எல்லோரும் முழு திரைக்கதையையும் எழுதிக் கொண்டு வருகிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த படத்தால் எவ்வளவு பணம் கிடைத்தது என்று நினைக்க கூடாது. அந்த படத்தில் இருந்து எவ்வளவு அனுபவங்களை பெற்றோம் என்று தான் நினைக்க வேண்டும்.

ஒவ்வொரு படத்திலும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திப்புகள் அபூர்வமானது. மீண்டும் அவர்கள் சந்திப்பார்கள் என்பது நிச்சயம் இல்லை. எனவே எல்லோரும் அன்பாக பழக வேண்டும். இந்த படத்தில் சுகமான பாடல்கள் உள்ளன. குத்துப்பாடல்கள் அதிகமாகவும் சுகமான மெல்லிய பாடல்கள் குறைந்தும் வருகிற கால கட்டத்தில் இந்த படத்தில் மென்மையான ராகங்களை கொண்ட பாடலை கேட்பது சந்தோஷம்.”

இவ்வாறு நாசர் கூறினார்.

விழாவில் நடிகர் சதீஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் அருமை சந்திரன், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-http://tamilcinema.news