இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும்

தஞ்சாவூர்,

சிவசேனா கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் கணேஷ்பாபு தலைமையில் மாவட்ட தலைவர் ராஜா, துணைத் தலைவர்கள் சபரிநாதன், வேலாயுதம், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாலா, சக்திசேனா இந்து மக்கள் இயக்க மாநில இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக நேற்று தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமல்ஹாசன் வார பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரையில் இந்து மதத்தை வேண்டும் என்றே இழிவுபடுத்தியுள்ளார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டு மோதல் ஏற்பட வேண்டும் என்றும், அதன்பொருட்டு அவர் அரசியல் மற்றும் விளம்பர லாபம் அடைய வேண்டும் என்றும் இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

இதன்காரணமாக வகுப்புவாத கலவரம் ஏற்பட்டு இந்திய இறையாண்மை சீர்குலைய வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்துடன் எழுதியுள்ளார். இந்த கருத்தினால் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த இந்து சமூகத்தினர் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுப்பிரமணிய சிவா, பாரதி, வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வீரமங்கை வேலு நாச்சியார், கட்டபொம்மன், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், பகத்சிங்) புகழுக்கு களங்கம் ஏற்பட வேண்டும் என்ற கெட்ட எண்ணம் வெளிப்படுகிறது. எனவே நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-dailythanthi.com