சக்க போடு போடு ராஜா திரைவிமர்சனம்

சந்தானம் நீண்ட நாளாக ஹீரோ இடத்தை பிடிக்க போட்டி போடுகிறார். அவரின் படங்களில் ஒன்றாக இன்று சக்கப்போடு போடு ராஜா வந்துள்ளது. அதுவும் வேலைக்காரன் படத்தோடு போட்டியில் இறங்கியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என ஒரு கை பார்த்துவிடலாம்.

கதைக்களம்

சந்தானம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன். அப்பா விடிவி கணேஷ்க்கு ஒரே பிள்ளை. அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. தன் நண்பரான டாக்டர் சேதுவின் காதல் திருமணத்திற்கு உதவி செய்துவைக்கிறார்.

சேதுவின் மனைவியான சஞ்சனா சிங் சென்னையில் பெரிய டானான பவானி சம்பத்துக்கு தங்கை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர், இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரை தீர்த்து கட்ட வலை வீசி தேடுகிறார்கள்.

இதற்கிடையின் பெங்களூரு டான் சத்யாவின் தங்கையாக வரும் வைபவியை சந்திக்கிறார். வைபவி தன்னை சத்யா தங்கை என கல்லூரியில் செய்யும் அட்டகாசம் அப்பப்பா. ரேகிங் குழுவுக்கு தலைவியே இவர் தான்.

எதிர்பாராத விதமாக சந்தானத்தை சந்திக்க அவரையும் வம்பிழுக்கிறார். ஆனால் நடப்பதோ வேறு. ஆனால் மர்ம கும்பல் ஒன்று ஹீரோயினை கொலை செய்ய வர கடைசியில் பவானியிடம் அடைக்கலமாகிறார் வைபவி.

பவானிக்கும் வைபவிக்கும் என்ன தொடர்பு, அவரை கொலை செய்ய அடியாட்களை ஏவியது யார், சந்தானம் தன் காதலில் ஜெயித்தாரா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

சந்தானம் ஹீரோவாகி விட்டு தான் ரிலாக்ஸ் ஆவேன் என விடாப்பிடியாக இருக்கிறார். அவரது தீவிர ரசிகர்களோ, நலன் விரும்பிகளோ அவரை காமெடியனாக தான் நாங்கள் விரும்புகிறோம் என்கிறார்கள்.

இவர்களின் எண்ணத்தை மாற்றும் படி தான் சந்தானமும் இப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை காட்சிகள் சொல்கிறது.

ஹீரோயின் வைபவி ஒரு டானின் தங்கையாக வெளியே கெத்து காண்பித்தாலும் வீட்டிற்குள் அப்படியே பெட்டி பாம்பாக அடங்கி போகிறார். கேரக்டருக்கான ரோலை படத்தில் சரியாக கொடுத்திருக்கிறார்.

படத்தில் சந்தானத்தின் உறவினராக டாக்டர் சேதுவாக ஓப்பனிங்கில் வருபவர் பின்னர் இரண்டாம் பாதியில் தான் வருகிறார். அவருக்கும் கதைக்கும் இடையே ஒரு முக்கிய தாக்கம் இருக்கும்.

படத்தில் காமெடியன்களாக விடிவி கணேஷ், விவேக், ரோபோ சங்கர், சுவாமி நாதன் என இருக்கும் போது பற்றாக்குறைக்கு பவர் ஸ்டாரையும் கூட்டணியில் சேர்த்துள்ளார்கள்.

ஓவ்வொருவரும் ஒவ்வொரு காட்சியில் முக்கியமானவர்களாகிறார்கள். காதல் திருமணத்தில் ஆரம்பிக்கும் இவர்கள் எங்கேயோ ஆரம்பித்து முதல் பாதியில் எங்கேயோ கொண்டு போய் நிறுத்தினாலும் இண்ட்ரவல் முடிந்தததுமே சஸ்பென்ஸை உடைக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து சில ட்விஸ்ட் கடைசி வரை.

படத்தை உட்கார்ந்து பார்க்கவேண்டும் என பார்த்து பார்த்து காட்சிகளை கோர்த்திருக்கிறார் இயக்குனர் சேதுராமன்.

சிம்பு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரது தம்பியை தவிர மொத்த குடும்பமும் இதில் இறங்கியிருக்கிறது. யுவன், அனிருத் என பலர் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள்.

-cineulagam.com