இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி கோவிந்த்

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார். அவரை தொடர்ந்து மற்றவர்கள் விருதுகளை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

-athirvu.com