பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகை.. நிஜம் என நினைத்து சுட்டுக் கொன்ற போலீசார்!

நியூயார்க்: மனநலம் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகையை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை வெனஸா மார்குயஷ். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேசடினாவில் வசித்து வந்த இவர், தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர், சமீபகாலமாக மனநிலை பாதிப்புக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது வீட்டு உரிமையாளர் சம்பவத்தன்று போலீசுக்கு போன் செய்து நடிகை தன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்ட மார்குயஷ், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி போலீசாரையும் சுட முயற்சித்துள்ளார். இதனால் தற்காப்பு நடவடிக்கையாக நடிகையை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் கைது செய்தனர். ஆனால் சோதனையின் முடிவில் அது பொம்மைத் துப்பாக்கி என்பது தெரியவந்தது.

பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வீட்டு உரிமையாளரை மிரட்டியுள்ளார் நடிகை. ஆனால், அது தெரியாமல் போலீசார் அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்ட மார்குயஷ், கடந்த ஆண்டு நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com