ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை

வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்து விட்டனர்.

இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். நடிகர் சங்கம் வடிவேலுக்கு 2 கடிதங்கள் அனுப்பி விளக்கம் கேட்டு சமரச முயற்சியில் ஈடுபட்டது. ஆனாலும் வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை திட்டமிட்ட தேதியில் தொடங்காமல் தனக்கு பொருளாதார இழப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டனர். எனவே அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பதில் அனுப்பினார்.

இதனால் இயக்குனர் ஷங்கர் தனக்கு அந்த படம் மூலம் ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதை வடிவேலு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று இன்னொரு கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பினார். அந்த தொகையை கொடுக்கவும் வடிவேலு சம்மதிக்கவில்லை.

இதனால் வடிவேலுவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்த தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-dailythanthi.com