ரசிகர்கள் திரண்டதால் ரஜினியின் ‘பேட்ட’ படப்பிடிப்பு பாதிப்பு

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயரிட்டு வடமாநிலங்களில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இமாசலப்பிரதேசம் பகுதிகளிலும், இமயமலையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இப்போது 3–வது கட்டமாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இதற்காக ரஜினிகாந்த் அங்கு முகாமிட்டுள்ளார். துணை நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் 700 பேர் சென்னையில் இருந்து சென்று உள்ளனர். அவர்கள் அங்குள்ள ஐந்து நட்சத்திர மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் 400–க்கும் மேற்பட்ட அறைகளில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர்.

லக்னோ பகுதியில் 10 இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். ரஜினிகாந்துக்கு உத்தரபிரதேச அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. அதையும் மீறி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் அங்கு திரள்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சுற்றி நின்று ரஜினியை பார்த்து ஆரவாரம் செய்வதும், கோ‌ஷமிடுவதுமாக உள்ளனர்.

இதனால் படப்பிடிப்பை வேகமாக நடத்த முடியாமல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் இறுதிவரை லக்னோவில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதோடு முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக் குழுவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகே ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

-dailythanthi.com