அடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா!

சென்னை: பண்ணாடி படத்திற்காக இரண்டு பாடல்களைப் பாடிக் கொடுத்துள்ளார் பிரபல பாடகி எஸ்.ஜானகியம்மா.

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா . பழநி வேலன். இவர் , கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரகாஷ்.

இப்படத்தின் சில பாடல்களை ஜானகியம்மா பாடினால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் விரும்பியுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இனிப் பாடுவதில்லை என ஓய்வை அறிவித்து விட்டதால், அவர் பாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக அவர்கள் ஜானகியம்மாவிடம் கேட்டுள்ளனர். அவரும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக இரண்டு பாடல்களைப் பாடிக் கொடுத்துள்ளார். இதனால் ‘பண்ணாடி’ படக் குழு நெகிழ்ந்து போயுள்ளது. விரைவில் அந்த இரண்டு பாடல்களையும் வெளியிடவுள்ளனர்.

பண்ணாடி:

இது பற்றி இயக்குனர் பழனி வேலன் கூறுகையில், “நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ‘ பண்ணாடி. இது கிராமத்துப் பின் புலத்தில் உருவாகிறது. படம் தொடங்குவதற்கு முன் இப்படத்தில் ஒரு பாடல் பாட எஸ்.ஜானகியைக் கேட்டிருந்தோம். அப்போதே அவர் சினிமாவில் பாடுவதைக் குறைத்து அனேகமாக நிறுத்தியிருந்தார்.

ஜானகியம்மா ஓய்வு:

அப்போது கேட்ட போது சூழல் பிடித்துப்போய் பார்க்கலாம் படம் தொடங்கும் போது வாருங்கள் என்றிருக்கிறார். நாங்கள் மீண்டும் எஸ்.ஜானகியைப் பார்த்த காலக்கட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். “நான் இனிப் பாடுவதில்லை என்று முடிவெடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட் டேன்” என்றார்.

பாடச் சம்மதம்:

ஆனால் இப்பாடலுக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் கற்பைனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என்றிருக்கிறார்கள். கடைசியில் ஒரு வழியாகச் சமாதானமாகி பாட ஒப்புக் கொண்டு பாடியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இரு வேறு வடிவம்:

இது பற்றி இப்படத்தின் இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் கூறும் போது, “இப்படத்தில் வரும் ஒரு பாடல் மகிழ்ச்சி, துயரம் என இரு வேறு வடிவங்களில் இருக்க வேண்டும் இதற்கு நான் ஜானகியம்மாவைப் பாட வைப்பதை ஒரு கனவு போல எண்ணியிருந்தேன். அவர் சினிமாவை விட்டு விலகி விட்டேன் என்றதும் சற்றே அதிர்ச்சியாகவே இருந்தது.

முதல்வரி:

நாங்கள் ஜானகி அம்மாவிடம் நீங்கள் தான் பாட வேண்டும் என்று கேட்டேன் அதற்கு நீங்கள் வேறு யாராவது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். என்னை விட்டு விடுங்கள் என்றார். நாங்கள் விடாமல் நச்சரித்தோம். விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் எங்கள் தொல்லை தாங்காமல் என்ன வரிகள் என்றார். நான் ‘ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன் ‘என முதல்வரியைச் சொன்னேன். புன்முறுவல் செய்தார். அப்பாடா என்றிருந்தது.

பிடிவாதம்

முதலில் சோகப் பாடலைப் பாடியவர், டூயட் பாடுவது ஆண் குரல் யார் என்றார். நான் டிராக் பாடி இருந்ததைப் போட்டுக் காட்டினேன். என் குரல் அவருக்குப் பிடித்து விடவே நீயே பாடு என்றார். இல்லம்மா நான் சும்மா டம்மிவாய்ஸ்க்காகப் பாடினேன் என்றேன். வேறு யாரையாவது வைத்துப் பாடவைப்பதே திட்டம் என்றேன். ஆனால் நீயே பாடு என்றார் .ஒரு கட்டத்தில் நீ பாடினால் தான் நான் பாடுவேன் என்றார் பிடிவாதமாக. இதனால் சரி என்றேன்.

பெரிய ஊக்கம்:

மகிழ்ச்சி, சோகம் என இரண்டு பாடல்களையும் ஒரே டேக்கில் பாடிக் கொடுத்தார். அத்துடன் படக் குழுவையும் வாழ்த்தினார். 80 வயதில் சற்றும் உற்சாகம் குறையாமல் அவர் பாடிக்கொடுத்தது வியப்பூட்டியது. ஜானகியம்மா எங்கள் படத்திற்குள் வந்தது எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது” என்கிறார்.

tamil.filmibeat.com