ஹிந்தி ‘காஞ்சனா’… ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் இந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் அது உண்மையாகும் படி காஞ்சனாவின் இந்தி மேக்கிங் தொடங்கி நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அந்த படத்திலிருந்து தற்போது வெளியேறிவிட்டதாக ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிக்க  இந்தியில் ”லட்சுமி பாம்” என்ற பெயரில் வெளிவர இருந்தது இந்த திரைப்படம்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில் வெளியாகியது. அதில் அக்‌ஷய் குமார் கண்ணுக்கு கீழே காஜல் இடுகிறார். அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியிட இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பபட்டிருந்தது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை கைவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதனால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது. அந்த போஸ்டரும் எனக்கு பிடித்ததுபோல இல்லை. நான் நினைத்தால் இந்த படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்‌ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், “படத்தின் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது. அதற்காக நடிகர் அக்‌ஷய்குமார் 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். அதற்குள் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். வேறு இயக்குநரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் இயக்குநர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். லாரன்ஸுக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை விரிவாக வெளியில் சொல்ல முடியாது” என்றார்.

-nakkheeran.in