வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கன்னட திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் என்ஜினியரான சரத்குமார் என்பவரை சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டார். இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுடன் சரத்குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் சுஷ்மிதா மிகவும் பாதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு, அன்னபூர் னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று தூக்கம் வருவதாக கூறிவிட்டு அறைக்கு சென்றவர் அதிகாலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வழக்கமாக சுஷ்மிதா தாமதமாகத்தான் எழுந்திருப்பார் என்று நினைத்து தாய் மற்றும் சகோதரன் இருந்துவிட்டனர்.

பின்னர் தங்கள் மொபைல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அதில் சுஷ்மிதா அனுப்பியிருந்த தற்கொலை கடிதம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இது குறித்து தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்த தற்கொலை கடிதம் தொடர்பான மெசேஜை எடுத்து காட்டினர்.

அதில் சுஷ்மிதா கூறியிருப்பதாவது:- அம்மா என்னை மன்னித்துவிடு. நான் செய்த தவறுக்கு நானே தண்டனை அனுபவித்து விட்டேன். எனது கணவர் அவரது பெரியம்மா வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கணவனின் சகோதரி கீதாவும் காரணம். அனை வரும் ஒன்று சேர்ந்து என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வேதனைப்படுத்தி விட்டனர்.

பல முறை நான் அவர்களின் காலில் விழுந்தும் என்னை விடவில்லை. இந்த கொடுமை தாங்காமல் அவர்கள் வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பிறந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டால் தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கருதி நான் நமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டேன். இந்த விபரீத முடிவால் நான் உனது அன்பை பெற முடியாதவளாகி விட்டேன்.

என்னுடைய இந்த தற்கொலைக்கு காரணமான அவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இறுதியாக உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நமது சொந்த ஊரிலேயே புதைத்து விடுங்கள். இல்லையென்றால் எரித்து விடுங்கள். ஆனால் என்னை வேதனைபடுத்தியவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுஷ்மிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் சரத், அவரது பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் அவர்களை தேடியபோது, 3 பேரும் மாயமாகி விட்டனர். தனிப்படை போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.

maalaimalar