80 கோடி பேருக்கு இலவச அரிசி, கோதுமை, பருப்பு: நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

  • நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும்.

  • ஏழைகள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.

  • பிரதம மந்திரி கரீப் கல்யான் ஆன் யோஜனா’ திட்டத்தின் கீழ் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். மேலும் 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

  • கொரோனாவிற்கு எதிராக போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு செய்யப்படும்.

  • விவசாயிகளுக்கு கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 8.69 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தவணையான 2000 ரூபாய் ஏப்ரல் முதல் வாரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

  • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள 5 கோடி பேரின் ஊதியம் ரூ.182லிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்படும். அவர்களுக்கு கூடுதலாக 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

  • மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் 3 கோடி பேருக்கு தலா ரூ.1000 இரு தவணையாக 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.

  • வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 வழங்கப்படும்.

  • உஜ்வாலா திட்டத்தில் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு உள்ள பயனாளிகளுக்கு 3 மாதம் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

  • மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 7 கோடி பெண்களுக்கு, அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

dinamalar