கொரோனா அதிகரிப்பு எதிரொலி – மாநில சுகாதாரதுறை மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஆலோசனை

இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மறந்துவிடக் கூடாது என்றார் சுகாதாரத்துறை மந்திரி.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில சுகாதார மந்திரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது முக்கியம். அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகளை கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும்.

விரைவான கொரோனா பரிசோதனை மூலம் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க உதவும். புது வகை மரபணு மாற்ற கொரோனா பரவுகிறதா என்பதை மாநிலங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய 5 வழிமுறைகளையும் கட்டாயம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

Malimalar