ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஹாங்காங்கை 29 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தியது இந்தியா

டி-பிரிவில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது. ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் டி பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த தகுதி சுற்று போட்டியின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2 வது நிமிடத்தில் இந்திய அணியின் அன்வர் அலி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 45 வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

2வது பாதியின் 85வது நிமிடத்தில் மண்விர் சிங்கும், 93வது நிமிடத்தில் இஷான் பண்டிதாவும் கோல் அடித்தனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

29 ஆண்டுகள் கழித்து கால்பந்து போட்டியில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டி-பிரிவு அணிகளில் 9 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்ததுடன் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

 

Malaimalar