பாகிஸ்தான் உளவாளிகளுக்கு உதவி செய்த 3 பேர் கைது

வெவ்வேறு பெயர்களில் சிம் கார்டுகள் வாங்கி அவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட ஒருமுறை கடவுச்சொற்களை (ஓடிபி) பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிர்ந்ததாக குற்றம்சாட்டி, 3 பேரை ஓடிசா காவல் துறையின் சிறப்புக் குழு கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 19 மொபைல் போன்கள், 47 சிம்கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள்,லேப்டாப்கள் கைப்பற்றப்பட் டுள்ளன.

இவர்கள் மூவரும், ஒடிசாவில் உள்ள கடைகளில் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டையைக் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர்.

அதன் மூலம், மின்னஞ்சல், சமூக வலைதளம், இ-காமர்ஸ் உள்ளிட்டவற்றில் கணக்குகள் தொடங்க ஓடிபிகளை உருவாக்கி, அந்த ஓடிபிகளை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உளவாளிகளிடம் விற்றுள்ளனர். இதற்கு பாகிஸ்தான் உளவாளிகள் பணம் வழங்கியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்கள்: காவல் துறையினர் கூறுகையில், “இந்த ஓடிபிகள் மூலம் பாகிஸ்தான் உளவாளிகள் மின்னஞ்சல், சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளனர். இந்தியர்களின் பெயர்களில் சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதால், இந்தக் கணக்குகள் இந்தியர்களால் தொடங்கப்பட்டதாக பார்க்கப்படும். இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியாவை உளவு பார்க்கின்றனர். தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன” என்றனர்.

 

 

-th