பட்டாசு விற்க, வெடிக்க டெல்லி அரசு தடை

டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ள அம்மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் பட்டாசு விற்கவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் மாநில அரசு கடந்த 11-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இதனை அறிவித்தார். டெல்லி அரசின் இந்த முடிவை எதிர்த்து பாஜக எம்பி மனோஜ் திவாரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு முறையிட்டார். மனோஜ் திவாரி சார்பாக அவரது வழக்கறிஞர், நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, பசுமை பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு மாறாக, டெல்லி அரசு ஒட்டுமொத்த தடையை விதித்திருப்பதாக புகார் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “டெல்லி அரசு எடுத்துள்ள முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம். பட்டாசுக்கு தடை என்றால், அது முழுமையான தடைதான். மக்களின் உடல்நிலை மிகவும் முக்கியம். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எங்கே தடை இல்லையோ அங்கே சென்று வெடிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மனோஜ் திவாரி வழக்கறிஞர், “எனது கட்சிக்காரர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். தனது தொகுதி மீது அவருக்கு பொறுப்பு உள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. எனவே, அந்த அனுமதியை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

 

 

-th