சிறப்பாக விளையாடியும் லீ சோங் வெய் தோல்வி!

இலண்டன் நகரில் நடைபெற்ற 19ஆவது உலகப் பூப்பந்துப் போட்டியின் ஆண்கள் தனிநபர் பிரிவுக்கான பட்டத்தை வெல்லும் முயற்சியில் உலகின் முதல் நிலை மலேசிய வீரர் லீ சோங் வெய் தோல்வி கண்டார்.

நேற்று ஆண்கள் தனிநபர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லீ சோங் வெய், சீனாவின் லின் டான் ஆகியோர் மோதினர்.

முதல் செட் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லீ சோங் வெய், 26 நிமிடங்களில் 22 – 20 என்ற புள்ளிகளில் தமது பரம வைரியான லின் டானை வீழ்த்தினார்.

இரண்டாவது செட்டில் சோங் வெய் அதிகப் புள்ளிகளைப் பெறுவதற்கு தடையாக லின் டானின் ஆட்டம் அமைந்திருந்தது. இந்த செட்டை லின் டான் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

மூன்றாவது செட் ஆட்டத்தில் இருவரும் கவனமாக வெளிப்படுத்திய அதேவேளையில் வெற்றிக்கு கடுமையான போராடினர். வெற்றியின் விளிம்பில் இருமுறை இருந்த சோங் வெய் இறுதியில் லின் டானிடம் தோல்வி கண்டார்.