நஜீப் எனும் நல்லவர்…!

najib“நானும் மாற்றம் வேணுமுன்னு நினைக்கிறேன்… ஆனா நஜீப் நல்லவர். அதனால் பாரிசானுக்கு வாக்களிக்கிறேன்” கோழைகளின் ஆகக் கடைசியான சமரசக் கூற்று இதுவாகத்தான் இருக்கும்.

இவர்கள் ‘நல்லவர்’ எனச் சொல்ல மிக முக்கியக் காரணி பாரிசான் அரசாங்கம் கொடுத்த 500 ரிங்கிட். நன்றி உணர்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது இந்தியர்களின் மனம் 500 வெள்ளிக்கு வாலாட்டாமலா இருக்கும்!

ஒரு பழமொழி உண்டு. ஒருவனுக்கு மீனைப் பிடித்துத் தருவதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என அப்பழமொழி கூறும். கொஞ்சம் சிந்திக்கும் போது பணம் கொடுப்பதன் மூலம் நஜீப் மேலும் இச்சமுதாயத்தை எவ்வளவு மலடாக்குகிறார் எனப் புரியும்.

ஒரு குடும்பச் சூழலைக் கொண்டுதான் இதற்கு உதாரணம் காட்ட வேண்டியுள்ளது. ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவியிடம் வீட்டு நிர்வாகத்திற்காக 100 ரிங்கிட் கொடுக்கிறான். அந்த மனைவி அவனிடம் விசுவாசமாக இருக்கிறாள். காரணம் அவளது அந்த மாத தேவைக்கு அவன் பணத்தை ஒரு பிச்சைபோல போடுகிறான். ஆனால் அவன் மனைவியால் அதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும். தனது சுயக்காலில் நிர்க்க முடியும். அவ்வாறான ஒரு சூழல் ஏற்படும் போது அம்மனைவி தன் கணவனுக்கு விசுவாசம் செலுத்த அவசியம் தேவையில்லை. அவள் தனது சுதந்திரத்தை உணர்ந்துகொள்கிறாள்.

indiansஅதிகார பீடத்தில் உள்ளவனின் பலம் எளியவர்களின் விசுவாசம் தான். விசுவாசம் ஒரு கெட்ட வார்த்தை. அது அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நலத்துக்காக ஏற்படுத்திக்கொண்ட வார்த்தை. ஒருவருக்கு 500 ரிங்கிட் தரும் பாரிசான் அரசால் எண்ணெய் விலையையும் குறைக்க முடியும். இலவசக் கல்வியையும் வழங்க முடியும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்வது இத்தனைக் காலம் மக்களிடமிருந்து அவர்கள் பெற்ற விசுவாசத்திற்குப் பாதகமாக இருக்கலாம். வேத மூர்த்தி போன்ற வியாபாரிகள் விரும்புவதும் அதுபோன்ற அதிகார பீடத்தைதான். கல்வி இலவசமாக்கப் படவேண்டும் என்ற பாக்காதான் திட்டம் மக்களை மேலும் தங்கள் உரிமை குறித்து சிந்திக்க வைக்கிறது. ஆனால், வேதா மீண்டும் அரசிடம் இந்திய மாணவர் கல்விக்காக கடனுதவி கேட்கிறார்.

நாம் ஏங்கி தவிக்கும் போது அவர்கள் கைக் கொடுக்கும் கடவுளாக நம் முன் தோற்றம் அளிக்கவே அதிகார பீடங்கள் விரும்புகின்றன.

பாக்காதான் கொடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் அவ்வாறான ஒரு கருத்தமைவும் இல்லை. அவை அனைத்துமே ஒட்டுமொத்த மக்களும் இருக்கின்ற சூழலில் சிக்கல் இல்லாமல் வாழ வகை செய்கிறது. ஆனால் நஜீப் மக்களை மீண்டும் விசுவாசிகளாக மாற்ற முயற்சி செய்கிறார். விசுவாசம் செலுத்தினால் நன்மை கிடைக்கும் என்பது எவ்வளவு அதிகாரத் தொணி. அதற்கு நாம் அடிமைப்பட வேண்டுமா?

-ம.நவீன்

குறிப்பு : இம்முறை வல்லினம் மாத இதழ் முழுக்க தேர்தல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வாசிக்க… www.vallinam.com.my