தலைவா பிரச்சனையில் நான் அரசுக்கு எதிரானவன் அல்ல: நடிகர் தனுஷ்

dhanush_001விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெளியாகமல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் திரையிடப்படவில்லை என்று கோவையைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு தொடர்ந்து தடை விதித்தால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் சொன்னதாக வேறு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தலைவா படத்திற்கு நிகழ்ந்த பிரச்சனை நியாயமற்றது. ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தனுஷின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் கூறிய கருத்திற்கு தனுஷ் விளக்கம் கூறுகையில், எனது ட்விட்டரில் ‘தலைவா’ படம் பற்றி கூறியிருந்த கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஒரு பகுதி மட்டும் பிரசுரிக்கப்பட்டதனால் அது வேறு அர்த்தத்தை தருகிறது. தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை நான் தெரிவிக்கவில்லை. நான் அரசுக்கு எதிரானவன் இல்லை.

தலைவா பட பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்து எதுவும் சொல்லவில்லை என்றும் ஒரு நடிகனாக, ரசிகனாக திரைப்படம் குறித்துதான் என்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.