இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ப. சிதம்பரம் நம்பிக்கை

pcஇலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 78.48 சதவீத வாக்குகளைப் பெற்று, போட்டியிட்ட 38 இடங்களில் 30-ல் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருதுகிறேன்.

மாகாணங்களில் முழு சுயாட்சி, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், இலங்கை அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய லட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நம்புகிறேன்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கொண்டுள்ள கொள்கை சரியானது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என ப. சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TAGS: