திரைப்படத் தொழில் பயிற்சி மையங்கள் தேவை: கமல்ஹாசன்

kamalதிரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்காக தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.

பெங்களூருவில் இந்திய தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கருத்தரங்கை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார்.

கருத்தரங்கில் நடிகர் கமல்ஹாசன் பேசியது:

இந்தியாவில் 60 சதவீதத் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் தயாராகின்றன. இதுவரை மும்பையில் ஃபிக்கியின் சார்பில், மாநாடு, கருத்தரங்கு நடத்தப்பட்டு வந்தன.

முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பொழுதுபோக்கு வர்த்தகக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு தந்த கர்நாடக அரசுக்கு நன்றி.

கருத்தரங்கில் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள் அலசி ஆராயப்படும். உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுகுறித்து தீவிரமாக இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

இந்தக் கருத்தரங்கு மூலம் திரைப்படத் துறையும், அரசும் அடுத்த கட்டத்தை அடையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில், தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியது:

சமூக நியாயங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளையும் கூறும் சிறந்த திரைப்படங்களைத் தந்த பெருமை இந்திய திரைப்படத் துறைக்கு உள்ளது. அதிலும் சிறந்த படங்களைத் தந்த பெருமை தென்னிந்திய திரைப்படத் துறைக்கு அதிகம் உள்ளது.

பொழுதுபோக்கு வர்த்தகத்துக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. தற்போது, ரூ. 23,900 கோடியாக உள்ள பொழுதுபோக்கு வர்த்தகம் வருகிற 2017-ஆம் ஆண்டில், ரூ. 43,600 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சித்தராமையா.

கருத்தரங்கில் கர்நாடக அமைச்சர் அம்பரீஷ், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பிமல்ஜுல்கா, மண்டியா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரம்யா, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.