இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீண்டும் பின்வாங்கல்? தலைவர்கள், டெசோ அமைப்பினர் எதிர்ப்பு

karunanidhiஇலங்கைப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு மீண்டும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெசோ அமைப்பினர் மற்றும் திமுகவினரே கருணாநிதியின் நிலைப்பாட்டால் அதிருப்தியில் உள்ளனர்.

கொமன்வெல்த் மாநாட்டு பிரச்சினையை, இது விவாதத்துக்குரியது என்ற எளிய வார்த்தைகளால் கருணாநிதி முடித்து விடுவார் என்று திமுகவினர் கூட நம்பவில்லை.

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பெயரளவுக்குக் கூட யாரும் பங்கேற்கக் கூடாது என்று அக்டோபர் 25ம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் வாசகங்களை மிஞ்சும் வகையில், இந்தியா சார்பில் துரும்பு கூட கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது. மாநாட்டுக்கு பிரதமர் சென்றால் அதன் விளைவுகளை காங்கிரஸ் கட்சியே அனுபவிக்க நேரிடும் என்று அழுத்தம் திருத்தமாக கருணாநிதி சொன்னார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நவம்பர் 2ம் தேதியன்று கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு, தற்போது கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருணாநிதி, பிரதமர் பங்கேற்காதது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது, குர்ஷித் பங்கேற்பது விவாதத்துக்கு உரியது என்று எளிமையாகக் கூறி முடித்துவிட்டார்.

இந்த முடிவு திமுகவினர் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, போர் நின்றது என்று கூறி கருணாநிதி போராட்டத்தைக் கைவிட்டார். அதைப்போன்ற கைவிடலாகவே தற்போது திமுக எடுத்துள்ள நிலைப்பாடும் பார்க்கப்படுகிறது.

21-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக டெசோ அமைப்பினர் சிலர் கருணாநிதியிடம் கருத்து கேட்டபோது அவர் மெளனத்தையே பதிலாகத் தந்துள்ளார்.

மேலும் சல்மான் குர்ஷித் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாகக் கேட்டபோது, அதற்கும் மெளனத்தையே பதிலாகத் தெரிவித்துள்ளார்.

தலைமை தாங்கும் நிலையில் உள்ள பிரதமர், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

அமைச்சரவை அளவில் குர்ஷித் பங்கேற்கிறார். அதுவும் முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்கப் போவதில்லை என்பதே கருணாநிதியின் கருத்தாக உள்ளதாம்.

இதனால் டெசோ அமைப்பில் உள்ளோரும் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.

கருணாநிதியின் மெளனத்தை மீறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கொமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித் பங்கேற்கக் கூடாது என்று வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளார்.

கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையில் இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.

தா.பாண்டியன் கூறுவதுபோல சறுக்கலைத் தொடரும் கூட்டமாக இது அமையுமா அல்லது மீண்டும் காங்கிரஸுக்கு எதிராக சீறுவதாக அமையுமா என்ற குழப்பத்தில் திமுகவினரே உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட செல்லக்கூடாது என்று கருணாநிதி கூறினார். இப்போது பிரதமர் செல்லாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று கூறியுள்ளார். இது இந்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் உருவாகியுள்ள மக்களின் எதிர்ப்பைத் திசை திருப்பும் முயற்சியாகும்.

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தவே கூடாது என்ற நிலைப்பாடுதான் சரியானது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்து, இறுதியில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வதை மறைமுகமாக ஆதரிக்கும் நிலைக்கு கருணாநிதி வந்துவிட்டதையே இது காட்டுகிறது என்றார் பழ.நெடுமாறன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து திமுக அதன் அடிப்படைக் கொள்கைகளை ஒவ்வொன்றாகக் கைவிட்டு வருகிறது.ே

மாநிலத்தில் இழந்த பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதும் மத்தியில் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதும் அதன் இலக்காக உள்ளது.

கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதும், சேர்த்த சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்கள் நிலையாக உள்ளது. இதற்காக காங்கிரஸின் உதவி கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது.

இதனால் இந்தியர்களைப் பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ திமுகவுக்கு அக்கறை இல்லை. அதனால் கருணாநிதியின் இதுபோன்ற சறுக்கல்கள் தொடரும் என்றார் அவர்.

TAGS: