தனித்தெலுங்கானா உருவாக்கப்பட்டால் ஆந்திராவில் ரத்த ஆறு பாயும்: முன்னாள் மந்திரி எச்சரிக்கை

teluஐதராபாத், நவ. 14- ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தனித்தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினர் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி தலைமையில் டெல்லி சென்று மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணியை சந்தித்து தெலுங்கானா மாநிலத்தை விரைவில் உருவாக்க வற்புறுத்தினார்கள்.

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும்  எந்தவித நிபந்தனையின்றி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று சோனியாவிடம் வற்புறுத்தி வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் ஐதராபாத் நகரை விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் திட்டவட்டமாக வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையே, ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வரும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆந்திர மாநில மந்திரியுமான சிவபிரசாத் ராவ் குண்டூரில் நேற்று பேட்டியளித்தார்.

“ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட கூடாது என்று தொடர்ந்து வற்புறுத்தி வரும் நாங்கள் இதுவரை அமைதியான முறையில் மட்டுமே போராடி வருகிறோம்.

ஆனால், எங்கள் உணர்வுகளை மதிக்காத காங்கிரஸ் கட்சி, ஆந்திர சட்டசபையிலோ, பாராளுமன்றத்திலோ மசோதா நிறைவேற்ற முயற்சித்தால் தேவையற்ற பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதன் விளைவாக வன்முறை வெடிக்கும். ஆந்திராவில் ரத்த ஆறு ஓடும் என்று மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும் எச்சரிக்கிறேன்” என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

TAGS: