மோடியை கொல்ல மனித வெடிகுண்டு: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

Narendra_Modi (2)பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கில்தான் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தோம் என்று கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாட்னாவில் நடந்த மோடி கூட்டத்தின்போது மோடி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 7 குண்டுகள் வெடித்தன.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்புக்குப் பின்னரும் மோடி கூட்டம் நடைபெற்றது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் வைத்து இம்தியாஸ் என்பவனை பொலிசார் கைது செய்தனர்.

இவனிடம் நடத்திய விசாரணையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது.

இம்தியாஸ் அளித்த வாக்குமூலத்தில், மோடியைக் குறி வைத்தே அன்று குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம். ராஞ்சியில் வைத்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரான நாங்கள் இதை தீட்டினோம்.

இரண்டு பேர் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தீட்டினோம். அனைத்துக் குண்டுகளையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் வைத்தோம். கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் வைத்தோம்.

நானும் என்னுடன் வந்த நபரும் மனித வெடிகுண்டுகளாக வந்திருந்தோம். கூட்டத்துக்குள் புகுந்து குண்டுகளாக மாறி வெடித்துச் சிதறி சேதத்தை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்.

இதற்காக பொதுக் கழிப்பறை ஒன்றில் புகுந்து எங்களது உடலில் குண்டுகளை கட்டினோம்.ஆனால் எதிர்பாராமல் ஒரு குண்டு வெடித்து விட்டது. இதில் எனது கூட்டாளி படுகாயமடைந்து விட்டான்.

மேலும் நாங்கள் பேருந்தின் மூலம் பாட்னாவுக்கு வந்து சேர்ந்தோம் என்றும் எனது கூட்டாளியின் உடலில் வெடித்த குண்டை, கூட்ட மைதானத்தில் வெடிக்கச் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தவறான இணைப்பால் அந்தக் குண்டு எதிர்பாராமல் வெடித்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

இந்த சதித்திட்டத்தில் எங்களுடன் இணைந்து 8 பேர் செயல்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

TAGS: