தன்னை அரசியல் வாரிசாக பார்க்க வேண்டாம்: கருணாநிதி பேரன் அருள்நிதி பேச்சு

thagararuதன்னை அரசியல் வாரிசாக பார்க்க வேண்டாம், ஒரு நடிகனாக மட்டுமே பாருங்கள் என்று அருள்நிதி வேண்டுகோள் விடுத்தார்.

மௌன குரு வெற்றியைத் தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் திரைப்படம் தகராறு. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தினை தயாநிதி அழகிரியின் ‘க்ளைட் நைன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தரண் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘தகராறு’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அருள்நிதி, வம்சம் பிரஸ்மீட்டில் நடுக்கத்துடன் பேசினேன். ஆனால் இப்போது அந்த நடுக்கம் இல்லை. அதற்கு மௌனகுரு கொடுத்த வெற்றி தான் காரணம். யாரும் என்னை ஒரு அரசியல் குடும்பத்தோட வாரிசா பார்க்காதீங்க. ஒரு நடிகனா பாருங்க.

இந்த திரைப்படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் பகல்கொள்ளை. அந்த டைட்டிலை வைத்தால் நீங்கள் என் குடும்பத்தை எப்படியெல்லாம் கலாய்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்குத்தான் இந்த டைட்டிலை மாற்றினோம். படத்துக்கு ஒரு டைட்டில் வைக்கும் விஷயத்திற்கு எப்படியெல்லாம் பயப்படவேண்டியிருக்கிறது.

துரை தயாநிதிக்கும் எனக்கும் சண்டை என்கிறார்கள். துரை என்னை வைத்து படம் எடுக்கிறான். துரை என் உயிர்மாதிரி. அவன் தான் என்னிடம் இந்த கதையை சொல்லி என்னை நடிக்கச் சொன்னான்.இந்த படம் என்னை ஒரு முழுமையான நடிகனா வெளிப்படுத்தும். ‘வம்சம்’ படத்துல அறிமுகமாகி அப்புறம் சில படங்கள்ல நடிச்சாலும், இந்த படத்துல என்னோட இயல்பான கேரக்டரை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகள் உள்ள படமா இந்த படம் அமையும்.

வீட்டுல, அம்மா கூட அடிக்கடி சொல்வாங்க. இங்க நல்லா பண்ணு, நடிக்கும் போதும் எதையும் பண்ணாதன்னுவாங்க. என் கிட்ட இருக்கிற சின்னச்சின்ன சுவாரசியமான விஷயங்களை வெளிப்படுத்தற மாதிரி இந்த படத்துல நல்ல காட்சிகள் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும் என்றார்.