கோத்தபாய ராஜபக்ச இந்திய அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியது என்ன?

kotta-kurshitராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச டெல்லிக்கு இரகசியமாக வந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் சமீபத்தில் கொமன்வெல்த் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார். போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்று எச்சரித்தார். அதன் பயனாக போரில் கொல்லப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதைப்போன்ற ஒரு நெருக்கடியை இந்திய அரசு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற சல்மான் குர்ஷித், போர்க்குற்றம் குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த மாநாட்டிற்கு பிறகு இந்திய கடற்படை தளபதி கொழும்பு சென்றார். அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசினார். இலங்கை கடற்படையை அவர் பாராட்டினார். அப்போது இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும் வகை செய்தார். இது பற்றிய தகவலை ராஜபக்சவே வெளியிட்டார்.

இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இத்தனைக்கும் மத்தியில் ராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச டெல்லிக்கு இரகசியமாக வந்து சென்ற தகவலும் வெளியானது.

அவர் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்கள் இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனையும் வியாழக்கிழமை சந்தித்து பேசியுள்ளார். மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான்குர்ஷித்தையும் சந்தித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

பத்திரிகைகளில் செய்தி வெளியான பிறகே அவர் வந்தது பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சல்மான் குர்ஷித்துடனோ அல்லது சிவசங்கர மேனனுடனோ அல்லது கடற்படை தளபதிகளுடனோ அவர் என்ன பேசினார் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சல்மான் குர்ஷித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்ற தகவல் மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய – இலங்கை இடையே கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக உயர்மட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ஆயுத கடத்தல், போதை கடத்தல் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்த சந்திப்புகளில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

TAGS: