ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்தியா விலக்கப்படக்கூடும்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் எச்சரிக்கை

olimpikஇந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் கறை படிந்த அதிகாரிகள் வெளியேற்றப்படாவிடில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்படக்கூடும் என்று பத்திரிகையாளர் செய்தி ஒன்றில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வரும் செவ்வாய்க் கிழமைக்குள் நல்ல நிர்வாகத்திற்கான விதிமுறைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் சமர்ப்பிக்கத் தவறினால் அவர்களின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது கொள்கைகள் பற்றிய விஷயம் என்று தெரிவித்த பச் நல்ல நிர்வாகம் என்பதுதான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முக்கிய கொள்கையாகும். இதில் நாங்கள் உறுதியாக இருக்க விரும்புகின்றோம் என்றும் கூறினார்.கடந்த 40 வருடங்களுக்கு முன்னால் இனவெறிக் கொள்கைகளின் காரணமாக தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவது தடை செய்யப்பட்டது. தற்போது இந்தியா வெளியேற்றப்படுமானால் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவிற்கு இது ஒரு தண்டனையாக இருக்கும்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தேர்தல்பணியில் அரசியல் குறுக்கீடுகள் இருந்ததால் ஐஓசி இந்தியக் கமிட்டியைத் தடை செய்திருந்தது. அதன்பின்னர் இதில் பல பிரச்சினைகள் சரி செய்யப்பட்டபோதிலும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாக இருக்கும் அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்வதே இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஐஓசி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் குழு நாளை புது டெல்லியில் கூடி சர்வதேச கமிட்டியின் உத்தரவை எதிர்கொள்ளும்விதத்தில் தங்களின் அரசியலமைப்பைத் திருத்துவது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படாவிடில், லாசேனில் செவ்வாயன்று கூடும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு இந்தியக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப் பரிந்துரைக்கும் என்று கூறப்படுகின்றது.

TAGS: