இந்தியப் பணிப்பெண் மோசமாக நடத்தப்பட்டது குறித்து ஏன் கொந்தளிக்கவில்லை? யு.எஸ்.கேள்வி

devayani_004துணைத் தூதருக்காக போராடும் இந்தியா அவரது பணிப்பெண்ணை கண்டுகொள்ளாதது ஏன் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தெரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவை வற்புறுத்தி வருகிறது.

தேவ்யானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேவ்யானி கைது குறித்து 3 பக்க விளக்கத்தை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரித் பராரா. அதில், தேவ்யானி கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வெளியான தவறான தகவல்கள் குறித்து, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தூதர்கள், தூதரக அதிகாரிகளின் வேலைக்காரர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க சட்டங்களை தேவயானி பின்பற்ற தவறி உள்ளார்.

தேவ்யானி அவரது குழந்தைகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டதாக தவறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை மற்றவர்களைப்போல அல்லாமல், முடிந்த அளவு மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் கைது செய்துள்ளனர். அவருக்கு அப்போது கை விலங்கிடப்படவில்லை. கட்டுக்குள் வைக்கப்பட்டு விடவும் இல்லை.

உண்மையைச் சொல்வதானால், கைது செய்த அதிகாரிகள் வழக்கமாக மற்றவர்களிடம் இருந்து கைப்பேசியை பறித்து விடுவதைக்கூட செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள விரும்பினாரோ அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தேவ்யானி கைது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஏறத்தாழ 2 மணி நேரத்தில் முடிந்து விட்டது. கடும் குளிர் காரணமாக அவரை தங்களது காரில் வைத்து போன் செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அவருக்கு காபி கூட வரவழைத்து கொடுக்கப்பட்டது. அவருக்கு உணவு தரவும் முன்வந்தனர்.

அவர் பொலிசாரின் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை கொண்டு அந்தரங்கமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இது ஒவ்வொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்கிற சோதனைதான்.

அவர் பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், அமெரிக்கராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் பாதிப்புக்குள்ளாகிவிடும் விதத்தில் அல்லது தன்னைத்தானே எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் எதையும் வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த சோதனை செய்யப்படுகிறது.

கொழுந்து விட்டு எரியச்செய்கிற சூழலை உருவாக்கும் அளவுக்கு தேவ்யானி விவகாரத்தில் தவறான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டியது முக்கியமாகி உள்ளது. ஏனெனில் அவை மக்களை தவறாக வழி நடத்திவிடும்.

தேவ்யானி, சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பொய்யான ஆவணங்களை அளித்துள்ளார். அவர் பொய்யான தகவல்களையும் அமெரிக்க அரசிடம் அளித்துள்ளார்.

எந்த அரசாங்கமாவது, தனது நாட்டுக்குள் ஒருவரை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஒருவர் பொய்யான தகவல்களை அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமா? சட்டத்தை மீறுகிற வகையில், பணிப்பெண்ணை சரிவர நடத்தாமல் இருந்தால் எந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுமா?

இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய பிரஜை நடத்தப்பட்டவிதம் குறித்து வரம்பு கடந்து நடந்துகொள்கிறார்களே, ஆனால் இந்திய பணிப்பெண்ணோ, அவரது கணவரோ மோசமாக நடத்தப்பட்டது குறித்து கொஞ்சமாவது கொந்தளித்தார்களா?

எங்கள் அலுவலகத்தை பொறுத்தமட்டில் அது, வழக்கினை நடத்துகிற அலுவலகத்தின் பொறுப்பை கொண்டுள்ளது. கைது செய்தல், காவலில் வைத்தல் தொடர்பானது அல்ல. எனவே அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த தகவல்களை தொடர்புடைய அமைப்புகளிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தேவ்யானி நடந்துகொண்ட விதம், நியாயம் என கூறுகிற வகையில் இல்லை என்பது தெளிவு என கூறியுள்ளார்.

மேலும் தேவ்யானி, இந்தியாவில் இருந்து வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துச்சென்ற பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்ட விதிகள்படி மணிக்கு 9.75 டொலர் (சுமார் ரூ.620) தருவதாக அழைத்துச்சென்றதாகவும், ஆனால் மணிக்கு 3.11 டொலர் மட்டுமே (சுமார் ரூ.186) சம்பளம் தந்ததாகவும், தினமும் 19 மணி நேரம் வலுக்கட்டாயமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும், இதற்கு உடன்படாத நிலையில் அந்தப்பெண், தேவயானியின் வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் தேவ்யானி மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS: